மத்திய சிறை இடத்தில் அமையும் செம்மொழி பூங்கா.. மதுரை மக்களுக்கு வந்த குட் நியூஸ்!
மதுரை: மதுரை மத்திய சிறை மாற்றப்படுவதால், நகரின் மையத்தில் உள்ள 31 ஏக்கர் இடத்தில் செம்மொழி பூங்கா பிரம்மாண்டமாக அமைய உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கோவையிலும் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இந்த செம்மொழி பூங்காவில் பல்வேறு வகையான செடிகள், மரங்கள், தோட்டம், உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு வாரமும் வருகின்றனர். காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த இடமாகவும் இது அமைந்திருக்கிறது. இதன் காரணமாக மதுரையிலும் செம்மொழி பூங்கா அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
மதுரை மத்திய சிறை மாற்றப்படுவதால், நகரின் மையத்தில் உள்ள இடம் செம்மொழி பூங்காவாக மாற்றம் செய்யப்பட உள்ளது. மதுரை மத்திய சிறையில் இட நெருக்கடி அதிகரித்துள்ளதால், மேலூரில் 89 ஏக்கரில் மத்திய மத்திய சிறைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய சிறை இடம் காலியாக இருக்கும் நிலை வந்தது.
இப்படியான சூழலில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பாக செம்மொழி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு தகுதியான ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க மாநகராட்சி ஒப்புதல் கோரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக மதுரையில் பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
அதற்கேற்ப நகரின் முக்கியமான இடத்தில் உள்ளூர் மக்களின் வசதிக்கு ஏற்ப செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருப்பது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறை வளாக கட்டுமான பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் நிலையில், செம்மொழி பூங்கா பணிகள் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின் மதுரை அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டி வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு மைதானம், கீழடி அருங்காட்சியம், வேலு நாச்சியார் மேம்பாலம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. டைடல் பார்க் முதற்கட்ட வளாகம் ஜூலை மாதத்தில் முடிவடைய உள்ளது. அதேபோல் கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளும் சுமார் 75 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. தற்போது செம்மொழி பூங்கா அமைக்கப்பட இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications