என் சட்டைப் பையில் விநாயகர் படம்.. யாருடைய உரிமையிலும் முதல்வர் தலையிட மாட்டார்.. அமைச்சர் மூர்த்தி
மதுரை: தனது சட்டைப்பையில் உள்ள விநாயகர் படத்தை எடுத்துக் காட்டி அமைச்சர் மூர்த்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாருடைய உரிமையிலும் தலையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை அருகே உலகநேரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பல்வேறு தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அண்ணாமலை என்னோட சவாலை ஏற்க ரெடியா? அமைச்சர் மூர்த்தி அறைகூவல்
வணிக வரி வசூல்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வணிக வரி கட்டாத 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பியதன் விளைவாக ரூ.67 கோடி அளவில் வணிக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகவரி செலுத்தாத டீலர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது முதலீட்டுத் தொகையை குறைவாக காண்பித்து வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதியோர்களுக்கு முன்னுரிமை
தொடர்ந்து பேசிய அவர், பத்திரப்பதிவு செய்ய முதியோர்கள் அலுவலகத்திற்கு வந்தால், அவர்களை காத்திருக்க வைக்கக்கூடாது. அவர்களின் வேலைகளை சீக்கிரமாக முடித்து அனுப்பி வைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர்களை காத்திருக்க வைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு ஒப்புதல்?
தமிழகத்தில் போலி பத்திரப் பதிவுகளை சார் பதிவாளர்களே ரத்து செய்வதற்காக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, போலி பத்திரங்களை பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து, ஆன்மிக விவகாரத்தில் யாருடைய தனிப்பட்ட உரிமையிலும் முதல்வர் தலையிடுவதில்லை. திமுகவிலும் ஆன்மிகவாதிகள் உள்ளனர். நானும் சட்டைப்பையில் விநாயகர் படம் வைத்துள்ளேன். ஆனால் தமிழகத்தில் மதத்தை வைத்து தவறான அரசியல் நடத்திவிடக் கூடாது என்பதே எங்களின் எண்ணம். மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதே திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்தார்.