வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆபத்தான பயணம்..பயணிகள் அவஸ்தை எப்போது தீரும்?
மதுரை: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புளி மூட்டையாக அடைந்து கொண்டு அவஸ்தையுடன் பயணம் செய்கின்றனர். ரிசர்வேசன் செய்யப்படாத கூடுதல் பெட்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பகல் நேர பயணிகளின் வரப்பிரசாதமாக உள்ளது. கொடைரோடு, திண்டுக்கல் நகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், வணிக விசயமாக திருச்சி, விழுப்புரம், சென்னை செல்பவர்களும் அதிகம் நம்பியிருப்பது இந்த ரயிலைத்தான்.
காலையில் சென்னை கிளம்பினால் இரவு நேர ரயிலில் மதுரைக்கு வந்து விடலாம் என்ற வசதி உள்ளதால் இந்த ரயிலில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பகல் நேரத்தில் இயக்கப்படும் பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொங்கி வரும் வைகை! இரு கரைகளும் அணைத்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! மதுரை மக்களே அலர்ட்டா இருக்கனும்!
வைகை ரயிலின் பயணம்
45 வருடங்களுக்கு முன்னர் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு வர வேண்டும் என்றால் இரவு நேரத்தில் இயக்கப்படும் பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தான் நம்பி இருக்க வேண்டியிருந்தது. இவற்றை விட்டால் அரசுப் பேருந்துகளில் அல்லது கொல்லம் மெயில் போன்ற பாசஞ்சர் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்தனர்.பகல் நேரத்தில் ஒரு ரயில் விட்டால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அனைத்து தரப்பினரும் ரயில்வே வாரியத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
மதுரை டூ சென்னை
தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 1977ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையிலிருந்து சென்னைக்கு காலையிலும், சென்னையிலிருந்து மதுரைக்கு மதியத்திலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதி விரைவு ரயில் வைகை
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மீட்டர் கேஜ் இருப்புப் பாதைதான் இருந்தது. அந்த மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றது. சென்னையிலிருந்து வணிகப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும், பிற அலுவல்களுக்கும் தென் மாவட்ட வணிகர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அமைந்தது.
வைகை ரயிலின் வேகம்
அதுமட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு. மதுரையில் இருந்து முன்பு 6.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. பின்னர் ரயிலின் வேகம் கூட்டப்பட்டது. அகலப்பாதை அமைக்கப்பட்டவுடன் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்துக்கு தற்போது செல்கிறது.
நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.
வேலைக்கு செல்பவர்கள்
மதுரையில் இருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரயில் வசதியாக உள்ளது. எனவேதான் இந்த ரயில் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. புளி மூட்டை போல அடைந்து கொண்டும் ஏராளமானோர் ரயிலில் தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர். எனவே பகல் நேர ரயில்களில் கூடுதலாக பொது பெட்டிகளை இணைப்பதன் மூலம் சிரமம் குறையும் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்றும் ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.