நேற்று முளைத்த காளான்.. விஜய்யை அப்படி சொல்வேனா.. பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த விளக்கம்!
மதுரை: நேற்று முளைத்த காளான் என்று தவெக தலைவர் விஜய்ய விமர்சிக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், விஜய்க்கு எப்போதும் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி.. இல்லம் நாடி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் 3ஆம் கட்டமாக மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, நேற்று சிவகங்கையில் மக்களை சந்தித்தார்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், நேற்று முளைத்த காளான் எல்லாம் இங்க எடுபடாது என்று ஆவேசமாக தெரிவித்தார். அதேபோல் தேமுதிக மாநாட்டிற்கு மக்களை அழைக்க எழுதப்பட்ட கடிதத்திலும், நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இதனால் விஜய்யை காளான் என்றும், அதிமுகவை நன்றி மறந்து துரோகம் செய்தவர்கள் என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சிப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சிற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், நான் விஜய்யை நேற்று முளைத்த காளான் என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை.
விஜயகாந்தும், எஸ்ஏசியும் 17 படங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கி பேசுவதில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் விஜய் சாதிக்க வேண்டும். கரூர் பிரச்சாரத்திலேயே 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் விஜய் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல் அதிமுகவையும் துரோகம் செய்தவர்கள் என்று விமர்சிக்கவில்லை. ராஜ்ய சபா சீட் கொடுப்பதால், அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட முடியாது. திமுக ஆட்சியை பொறுத்தவரை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளுக்கு 50 மார்க் கொடுக்கலாம். இன்னும் மீதம் ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications