"யாருக்கும் அடிமையில்லை" கூட்டணியில் யாரையும் பிடித்துவைக்க முடியாது.. கொந்தளித்த செல்லூர் ராஜூ!
கூட்டணியில் எந்தக் கட்சியையும் பிடிக்க வைக்க முடியாது என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவுக்கு தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை நிச்சயமாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நாங்கள் யாரும் அடிமையில்லை என்று கூறிய செல்லூர் ராஜூ, மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் வைப்பதாக விமர்சித்துள்ளார்.
மதுரை கோச்சடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தனது மகன் தமிழ்மணி நினைவாக இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு குழப்பம் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ பேட்டி
பின்னர் டிஆர் பாலு பேச்சு பற்றிய கேள்விக்கு, திமுகவின் பொறுப்பு மிக்க தலைவராக உள்ள டிஆர் பாலு வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசுவது முறையல்ல. ஆசிரியர் வீரமணிக்கு டி.ஆர்.பாலு குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை. டிஆர் பாலுவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. டிஆர் பாலுவின் பேச்சு திமுக எவ்வளவு வன்முறை எண்ணம் நிறைந்தது என்பதை காட்டுகிறது.

வாரிசு அரசியல்
தொடர்ந்து, மன்னர், மன்னரின் மகன், இளையராஜா அடுத்தது கொள்ளு ராஜா. தற்போது கொள்ளு ராஜாவாக இன்பநிதி உள்ளார். ஒரு மூத்த அமைச்சரான இருக்கும் கே.என்.நேரு எவ்வளவு தூரம் திராவிட இயக்க பகுத்தறிவு கொள்கை சிந்தனையில் இருந்து வெளியேறி உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் கொடி பிடிப்போம், தூக்கி பிடிப்போம் என்று பேசுவதெல்லாம் வாரிசு அரசியலின் ஆழமான அடையாளத்தையே காட்டுகிறது.

நேற்று வரை உதயநிதி என்ன செய்தார்?
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்யலாம் ஆனால் உதயநிதி ஸ்டாலின் நேற்று வரை என்ன நல்லது செய்தார். அப்பாவுக்கு துணையாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தற்போது மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் வைக்கின்றனர். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம்
தொடர்ந்து இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதமா என்ற கேள்விக்கு, சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறு. நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறியுள்ளது. அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்திற்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். 20 மாத திமுக ஆட்சியில் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

நாங்கள் அடிமையில்லை
தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணி பற்றிய கேள்விக்கு, அதிமுகவுக்கு தேடிப் போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை நிச்சயமாக இல்லை. ஒரு அண்ணன் தம்பிக்குள் பிரிவு வருகிறது. சின்ன கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நண்பர்களை சென்று பார்ப்பதில் தவறு ஏதுமில்லை. யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது. எங்களை ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. நாங்கள் யாருக்கும் எஜமானர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. எங்கள் கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்களாக விலக்கியது கிடையாது என்று கூறினார்.

காமராஜரை விட பெரியவரா?
பின்னர் திமுக கூட்டணி வேட்பாளர் பற்றிய கேள்விக்கு, பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து அன்றைய திமுக மாணவர் அணி தலைவர் சீனிவாசன் வெற்றி பெறவில்லையா. மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் நீதிமான்கள். மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும்.
பெருந்தலைவர் காமராஜரை விட இளங்கோவன் என்ன பெரிய ஆளில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இடைத்தேர்தல் சாக்கடை தேர்தல் எனவும், அதில் எல்லாம் நிற்க மாட்டோம் என ஒரு காலத்தில் பேசிய இளங்கோவன் தற்போது எதற்காக தேர்தலில் நிற்கிறார் என தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருப்பதால் தன்னை கரை சேர்ப்பார்கள் என நினைத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிற்கிறாரா என தெரியவில்லை.

எதிரிகளே இல்லை
அதிமுகவுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. எங்களுடைய எதிரிகளையே எங்களால் பார்க்க முடியவில்லை. இடைத்தேர்தலில் ஜனநாயகம் தான் வெல்லும். பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை. ஈரோடு பொதுமக்கள் சிறப்பானவர்கள்
பெரியார் பிறந்த பூமி என்பதால் நம்பிக்கையோடு நிற்க உள்ளோம். மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications