உச்சகட்ட பதற்றம்.. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் மசூதிக்கு தீவைப்பு? திரிபுராவில் என்னதான் நடக்கிறது
அகர்தலா: திரிபுராவில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) நடத்திய பேரணியில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது கொமிலா என்ற நகரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைச் சிலர் இழிவுப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.
ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
இதையடுத்து கொமிலா பகுதியில் வைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் மளமளவென அந்நாடு முழுவதும் பரவியது.
வங்கதேசம் வன்முறை
பல்வேறு பகுதிகளிலும் இந்துக்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர்; இந்துக்களின் வீடுகளும் சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டது. சில இடங்களில் இந்து கோவில்களும் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு அந்நாட்டின் சிறுபான்மை துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணி
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்கு எதிராகத் திரிபுராவின் தர்மநகர் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மசூதி ஒன்று, அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
இதையடுத்து திரிபுராவில் வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் இருக்க தர்மநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சாம்திலா பகுதியில் ஒரு மசூதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் திரிபுரா மாநில ரைபிள்ஸ் (டிஎஸ்ஆர்) வீரர்களுடன் மத்திய துணை ராணுவப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மசூதியில் தாக்குதல்
இது குறித்து மாவட்ட எஸ்பி பானுபதா சக்ரவர்த்தி கூறுகையில், "இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. நேற்றிரவு, இரு சமூகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் சில சமூக விரோதிகள் ஊடுருவினர். அவர்கள் தான் சாம்ட்டில்லா மசூதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் திரிபுராவின் அமைதியான சூழ்நிலையைச் சீர்குலைக்க சில சுயநலவாதிகள் முயல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீஸ் விளக்கம்
தேசவிரோதிகள் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளையும் வதந்திகளைப் பரப்புவதாகவும் இந்த வீடியோக்களுக்கும் திரிபுராவல் இப்போது நடந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் திரிபாதி தெரிவித்தார். மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் எந்த மசூதியிலும் தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் இதுபோன்ற செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இந்த தொடர் சம்பவங்களால் திரிபுரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.