13 வயசுதான்.. கிளாஸ் ரூமில் வைத்தே சக மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்கள்.. மும்பையில் கொடூரம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் 8ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் சக நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் 13 வயது உடையவர்களாவார்கள். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலாத்காரம்
சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "மத்திய மும்பையின் துறைமுகத்தையொட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வகுப்பறையிலேயே இந்த குற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி இதில் பாதிக்கப்பட்டிருக்கிறாள். குற்றம்சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர் என எல்லோருக்குமே வெறும் 13 வயதுதான். சம்பவத்தன்று மற்ற மாணவர்கள் அனைவரும் நடன பயிற்சிக்காக தரைத்தளத்திற்கு சென்றுள்ளனர். வகுப்பில் இந்த சிறுமியை மட்டும் மாணவர்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள். அனைவரும் சென்ற பின்னர் சிறுமியிடம் இவர்கள் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.

புகார்
பின்னர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இது அனைத்தும் பள்ளி வகுப்பறையிலேயே நடந்துள்ளது. சம்பவத்தன்று எந்த ஆசிரியரும் இதனை கவனிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பெற்றோர் கவனித்துள்ளனர். மாணவி சரிவர பள்ளிக்கு செல்லவில்லை. அடிக்கடி பயந்திருக்கிறாள். எனவே மாணவியை தங்களது உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது உறவினர்கள் சிறுமியிடம் பேசுகையில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் எங்களிடத்தில் புகார் அளித்துள்ளனர்.

கைது
புகாரையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை IPC பிரிவு 376 டி-ஏ, 506, 34 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். மாணவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, வகுப்பறையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் ஆசிரியர்களிடமும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ததுடன் மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளனர். எனவே சிறுவர்கள் இக்குற்றத்தை சுயநினைவுடன்தான் செய்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் பாலியல் படங்களை பார்த்து இவ்வாறு செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் மேலெழுந்துள்ளது" என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா
இந்தியாவில் சிறார்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2019ல் 47,335 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆண்டில் பதிவான மொத்த குற்றங்களில் இந்த போக்சோ குற்றங்கள் மட்டும் 31.94 சதவிகிதமாகும். இது 2020ல் 36.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல 2021ல் 36.05 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இந்த குற்றங்களை களையெடுக்க வேண்டுமெனில் பெண்கள் குறித்த புரிதல்கள் அவசியம் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக ஆண் பெண் சமத்துவம் என்பது வெறுமென ஏட்டளவில் இல்லாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதேபோல பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications