மக்களின் உயிர் அனைத்தையும்விட முக்கியமானது.. சாதித்து காட்டிய தாக்கரே. மும்பையில் 50%குறைந்த கொரோனா
மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, மும்பையில் கொரோனா பாதிப்பு, மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கொரோனா காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பஸ்கள் இயக்கம்.. ஆனா யார் பயணிக்கலாம் தெரியுமா?
குறிப்பாக, இந்க இரண்டாம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா இருந்தது. அங்குத் தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 67 ஆயிரம் வரை சென்றது.
144 தடை உத்தரவு
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே முதலில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அறிவித்தார். அதன் பின்னரும் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவை அவர் மாநிலத்தில் பிறப்பித்தார். இதன் காரணமாக அதிக அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
கொரோனா
இருப்பினும், 144 தடை உத்தரவுக்கு பிறகு அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. மும்பையில் இன்று 5,888 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 14ஆம் தேதியுடன் (11,163 கேஸ்கள்) ஒப்பிடுகையில் 50% குறைவாகவும். அதேபோல கடந்த மூன்று வாரங்களில் பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பில் இது தான் மிகக் குறைவு, நேற்றைய கொரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது இது 20% குறைவாகும்.
இரட்டிப்பு விகிதம்
மற்ற நகரங்களைவிட உருமாறிய கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பையில், கொரோனா இரட்டிப்பு விகிதமும் 50 நாட்களைக் கடந்துள்ளது. இது மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 18%இல் இருந்து 15% ஆக குறைந்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
குறையும் வைரஸ் பாதிப்பு
மும்பையில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சில வாரங்களிலேயே மீண்டும் குறைய தொடங்கியுள்ளது, மும்பைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது மும்பையில் 120 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன. 1200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளே வைரஸ் பரவல் குறைய முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஊரடங்கு இல்லை
தாக்கரே அரசு மகாராஷ்டிராவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு என்பது ஊரடங்கு இல்லை என்றே தொடர்ந்து மறுத்து வருகிறது. இருந்தாலும்கூட, மாநிலத்தில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டதைப் போல மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 5க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்குள் எதிர்ப்பு
ஜிம்கள், மால்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த 144 தடை பற்றிய அறிவிப்பை வெளியிடும்போது, எதிர்க்கட்சியான பாஜக மட்டுமின்றி தொழில்துறையினர், அவ்வளவு ஏன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும்கூட கடுமையாக எதிர்த்தது.
வாழ்க்கை முக்கியம்
ஆனால், அப்போது உத்தவ் தாக்கரே கூறினார், "மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதுதான். ஆனால் அதைவிட அவர்களின் வாழ்க்கை முக்கியமானது" என்றார். அவர் கூறியதைப் போலவே கடும் கட்டுப்பாடுகள் மூலம் அங்கு வைரஸ் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இது தாக்கரே அரசுக்குச் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மகாராஷ்டிராவில் வரும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.