126 பயணிகளோடு டாக்கா சென்ற விமானம்.. நடுவழியில் பைலட்டுக்கு மாரடைப்பு.. நாக்பூரில் அவசர தரையிறக்கம்
மும்பை: மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பறந்து சென்ற விமானத்தில் பைலட்டிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
போயிங் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 126 பயணிகள் இருந்துள்ளனர். மஸ்கட்டிலிருந்து டாக்கா சென்றபோது, இந்திய வான்வெளி எல்லையில் விமானம் சென்றபோது, திடீரென விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானிகள் குழு விமான கட்டுப்பாட்டு அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர்.

ராய்ப்பூர் அருகே விமானம் பறந்தபோது இவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் விமானிகள். கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆனால், அதைவிட அருகேயுள்ளது நாக்பூர் விமான நிலையம் என்பதால் அங்கே தரையிறங்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனவே காலை 11.40 மணியளவில் விமானம், நாக்பூரில் தரையிறங்கியுள்ளது. இதையடுத்து உள்ளூர் மருத்துவமனையொன்றில் விமானி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்சை சேர்ந்தது இந்த விமானமாகும். பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் சமீபத்தில்தான் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தொடங்கியது. முன்பு கொரோனா காலத்தில், அவை இயக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications