முதல்வர் பதவி தருவீங்களா.. பேசுவோம்.. இல்லாட்டி வேணாம்.. உத்தவ் தாக்கரே கறார்
Recommended Video
மும்பை: முதல்வர் பதவி கொடுப்பதற்கு ரெடி என்றால் மட்டும் எனக்கு கூப்புடுங்க, மற்றபடி எதற்கும் என்னை அழைக்க வேண்டாம் என பாஜகவுக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கறராக சொல்லியிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு தொடர்பான முட்டுக்கட்டை 14 வது நாட்களாக தொடரும் நிலையில் , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று, " கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பவில்லை, ஆனால் மக்களவைத் தேர்தலின் போது சமமான அதிகாரப் பகிர்வு என்ற உறுதிமொழியை பாஜக நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறார்.
"நான் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை, ஆனால் மக்களவைத் தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை பாஜக செயல்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று உத்தவ் தாக்கரே இன்று மும்பையில் நடைபெற்ற சிவசேனா எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் கூறினார்.
முதல்வர் பதவி
லோக்சபா தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டால், பாஜகவின் உயர் தலைவர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.எல்.ஏக்கள் மத்தியில் தெரிவித்தார். "லோக்சபா தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை பாஜக ஒப்புக் கொண்டால் நாங்கள் அவர்களுடன் பேசுவோம். எங்களுக்கு 2.5 ஆண்டுகளாக முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்தால் அவர்கள் என்னை அழைக்கலாம், இல்லையெனில் என்னை அழைக்க வேண்டாம்" என்று அவர் கூறினார்.
சுயமரியாதை
உத்தவ் தாக்ரே "நமது கட்சி சுயமரியாதையால் பிறந்தது. நாம் பாஜகவிடம் எதையும் மூடிமறைக்க விரும்பவில்லை. முதல்வரின் அறிக்கை முற்றிலும் பொருத்தமற்றது நான் பொய் சொன்னேன் என்பதை அவர் நிரூபிக்க முயல்கிறது. அவர்கள் செய்வது சரியல்ல. பாஜக சொன்ன வார்த்தையின்படி நடந்து கொள்ள விரும்பவில்லை என்றால், பேசுவதில் என்ன பயன்? "என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
2.5 ஆண்டு முதல்வர்
லோக்சபா தேர்தலின் போது 2.5 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியைப் பகிர்வது உட்பட சம அதிகாரப் பகிர்வு முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தொடர்ந்து கூறிவருகிறது.
இறுதி முடிவு
இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்பதாக கூறினார்கள். எம்.எல்.ஏ அப்துல் சத்தார் கூறுகையில் "தற்போதைய சூழ்நிலையில் முடிவெடுப்பதை எங்கள் தலைவரிடம் விட்டுவிட்டோம். அவர் எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம் "என்று கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்கள் கூறினார்கள் என தெரிவித்தார். மற்றொரு எம்.எல்.ஏ உதய் சமந்த் கூறுகையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தலைவருக்கு இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளோம் என்றார்.
முடியும் பதவி காலம்
இதனிடையே முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி காலம் 24 மணி நேரத்துடன் முடிவடையும் நிலையில் பதவி ஏற்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.