120 எம்எல்ஏக்கள் இருந்தும்.. பால்தாக்ரே தொண்டன் என்னை முதல்வராக்கியது பாஜக.. நெகிழும் ஏக்நாத் ஷிண்டே
மும்பை: பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட அதிகாரத்தை விரும்பாமல் பால்தாக்கரேவின் தொண்டனை முதல்வராக்கி உள்ளது என மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்க உள்ள ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சியாக கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். பாஜக 105 இடங்களில் வென்ற நிலையில் சிவசேனா 55 இடங்களில் வாகை சூடியது.
மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சிஅமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சி அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் திருப்பம்.. முதல்வராகும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே! இன்றே பதவியேற்பு
மகாராஷ்டிரா கூட்டணியில் மாற்றம்
ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் ஆட்சி அமைத்த இந்த கூட்டணிக்கு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். 169 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக செயல்பட்டு வந்தார். இரண்டரை ஆண்டு ஆட்சி நடந்தது.
சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி
இந்நிலையில் தான் சிவசேனாவின் 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்கள் சிவசேனாவின் மூத்த தலைவர் யோக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டு அசாம் மாநிலம் கவுஹாத்தி ஓட்டலில் முகாமிட்டனர். நேற்று கோவா ஓட்டலுக்கு மாறினர். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே கூட்டணி ஆட்சிக்கு அவர்கள் வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றனர்.
உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதனால் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே இழந்தார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தனது எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் நேற்று இரவு வழங்கினார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரல்
இதையடுத்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வியூகம் வகுக்கப்பட்டு வந்தது. முன்னாள் முதல் அமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் தீவிர ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கோவாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே இன்று மும்பை திரும்பினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக தலைவர்கள் இன்று மாலை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அறிவிக்கப்படுவார் என எதிர்க்கப்பார்க்கப்பட்ட நிலையில் ட்விஸ்ட் வைக்கப்பட்டது. அதாவது ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சராக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இதன்மூலம் ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏக்கள், அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் இணைந்து ஆட்சியை அமைக்க உள்ளனர்.
அதிகாரத்துக்கு ஆசைப்படாத பாஜக
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளன. இருந்தாலும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்கவில்லை. தாராள மனப்பான்மையை காட்டி பால்தாக்கரேவின் தொண்டனாகிய என்னை முதல்வராக அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பிற தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்து கெள்கிறேன்.
நம்பிக்கையை சிதைக்க மாட்டேன்
என்னுடன் சிவசேனாவை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் உதவியால் தான் இந்த போரில் ஈடுபட்டோம். இந்த 50 பேரும் என்மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன். இவர்களுடன் கடைசி வரை உடன் அழைத்து செல்வேன்.
பாஜகவுடன் கூட்டணி
நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு பால்தாக்கரேவின் இந்துத்துவா மற்றுமு் எம்எல்ஏக்களின் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க வழிவகை செய்யும் என்பதை நம்புகிறேன். நாங்கள் எம்எல்ஏக்களாக இருக்கிறோம். எங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உத்தவ் தாக்கரேவிடம் கூறினோம். இதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க அவரிடம் கோரிக்கை வைத்தோம். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை'' என்றார்.