அடுத்த அக்கப்போருக்கு அஸ்திவாரம்- மாநில நெடுஞ்சாலைகளை கபளீகரம் செய்யும் மத்திய அரசு- நிதின் கட்காரி
மும்பை: அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (நிதின் கட்காரி) தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் மற்றும் 4, 6, 8 வழிச்சாலைகள் விரிவாக்கம் ஆகியவை கடும் எதிர்ப்புகளுக்குள்ளாகி வருகிறது. நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை தமிழகம் மிக கடுமையாக எதிர்க்கிறது.

டோல்கேட் எதிர்ப்பு
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சுங்க கட்டணம் வசூலிக்கும் டோல்கேட்டுகள் அதிகம் இருக்கின்றன என்பது குற்றச்சாட்டு. அதேபோல் சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்களை ஆக்கிரமிக்கவும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் மத்திய அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகளுக்கு குறி
மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய தேசிய உறுப்பினர்கள் பரிமாற்ற சங்கத்தின் (Association Of National Exchanges Members Of India) 12 வது சர்வதேச மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு கையகப்படுத்தும். இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது.

4,6 வழி சாலைகளாக விரிவாக்கம்
மாநில அரசுகளின் நெடுஞ்சாலைகளைக் கைப்பற்றிய பின்னர், இந்த மாநில நெடுஞ்சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 12-13 ஆண்டுகளுக்குப் பின் இந்த மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து வட்டி மற்றும் நிலம் கையகப்படுத்தும் செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும்.

சென்னை- பெங்களூர் 2 மணிநேரம்தான்..
இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் வர இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் விரைவு சாலைப் பணிகள் முடிவடைந்துவிடும் .

புதிய சாலைகள்
டெல்லி-ஜெய்பூர் 2 மணி நேரத்திலும், டெல்லி-அமிர்தசரஸ் 4 மணி நேரத்திலும், டெல்லி -ஸ்ரீநகர் 8 மணி நேரத்திலும் , டெல்லி -மும்பை 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் . இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications