அடடா.. அமித்ஷாவுக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.. வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை
மும்பை: மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்த மத்திய உள்துறை அமைச்சரின் பயணத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பல ஆண்டு காலமாக சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து இருந்தன. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி முறிந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இரண்டரை ஆண்டு முடிவடைந்த நிலையில் சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் வெளியேறி பாஜகவின் பக்கம் சாய்ந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது சிவசேனா கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை பிரித்து சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

மும்பை சென்ற அமித்ஷா
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா தலைநகரான மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பை சென்றார். லால்பாக்ராஜா மண்டலில் சாமி தரிசனம் செய்தார். இதேபோல மலபார்ஹில் பகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் சென்று ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இணையத்தில் பரவும் வீடியோ
இந்நிலையில் தான் இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது. அதாவது சாலையில் போலீஸ் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஒருபுறம் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஆம்புலன்ஸ் ஒன்றும் நிற்கிறது. மேலும் இந்த வீடியோவானது மும்பை அந்தேரியில் அமித்ஷா பயணத்துக்காக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது எடுக்கபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிளம்பிய எதிர்ப்பு
மேலும் இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் உள்பட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சாகீத் கோகலே விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும்..
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இதற்கு முன்பு மும்பையில் இதனை நினைத்து பார்க்க முடியாது. அமித்ஷாவின் கான்வாய் செல்ல ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது. அமித்ஷாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு தான். விஐபி, விவிஐபி பாதுகாப்பு அல்ல. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக அவருக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன'' என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications