பணமோசடி வழக்கு.. திடீரென சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. மும்பையில் பரபரப்பு!
மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்பி-யுமான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத்தை கைது செய்தது. அதுமட்டுமல்லாமல் சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் சுமார் ரூ.11 கோடி சொத்துகளை முடக்கியது.
இந்த நிலையில் சிவசேனா கட்சித் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே தனி அணியாக உருவெடுத்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் புயல் வீசிய நிலையில், மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.
அப்போது சஞ்சய் ராவத் தரப்பில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதில் 15 நாட்களுக்குப் பின் விசாரணைக்கு வருவதாக வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜரானார். அப்போது சில மணி நேரம் மட்டும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதன் பின் கடந்த 20ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. ஆனால் சஞ்சய் ராவத் இன்று நேரில் ஆஜராகவில்லை. அதேபோல் ஜூலை 27ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
அதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி, சஞ்சய் ராவத் தரப்பில் எழுத்துப்பூர்வமான பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவர் கூறியிருந்ததுடன், ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு பிறகு நேரில் ஆஜராக நேரம் கோரியிருந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் வீட்டிற்கு காலை 7 மணிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் போது சஞ்சய் ராவத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications