முதல்வர் இல்லத்தை காலி செய்த உத்தவ் தாக்கரே.. ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேள்வி.. அடுத்தது என்ன?
மும்பை: சிவசேனா கட்சிக்கு எதிராக 34 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் இல்லத்திலிருந்து பெட்டி படுக்கையுடன் வெளியேறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் மேலவைத் தேர்தலில், பாஜக வேட்பாளர்கள் அதிகமாக வெற்றி பெற்றனர். இதற்கு சிவசேனா கட்சி எம்எல்ஏ-க்கள் உதவியதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் குஜராத்தில் முகாமிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பில், சிவசேனா - காங்கிரஸ் கட்சி கூட்டணியை எதிர்ப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கப்பட்டது. பின்னர் உத்தவ் தாக்கரே தரப்பில், அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 34 பேர் இரவோடு இரவாக குஜராத்தில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து சமூகவலைதளம் மூலம் தொண்டர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்எல்ஏ-க்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் தயாராகவே உள்ளது. என்னுடன் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. எனக்கு எதிராக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. அல்லது ஒரே ஒரு நபர் எனக்கு எதிராக இருந்தாலும் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன். ஆனால் அடுத்த முதலமைச்சராக சிவசேனாவை சேர்ந்தவர் தான் வருவார் என்று உறுதியளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிரா ஆளுநருக்கு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம் - இனி என்ன நடக்கும்?
Recommended Video
இதனைத்தொடர்ந்து சிவசேனா அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெர்சா இல்லத்திலிருந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெட்டி படுக்கையுடன் சொந்த வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் வீடு முன் குவிந்த சிவசேனா கட்சியினர், கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.