திடீரென 3வது மாடியில் இருந்து குதித்த மகாராஷ்டிர துணை சபாநாயகர்.. அடுத்து என்ன நடந்தது! ஷாக் சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், தங்கர் என்ற சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்ப்பது குறித்து மகாராஷ்டிர அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த என்சிபி எம்எல்ஏக்கள் சிலர் தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குதித்த என்சிபி தலைவர்கள்: இதற்கிடையே தங்கர் என்ற சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிரா துணைச் சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் திடீரென தலைமைச் செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தலைமைச் செயலகத்தில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்க முதல் தளம் அருகே வலை போடப்பட்டு இருந்த நிலையில், நான்கு பேரும் நல்வாய்ப்பாக எந்தவொரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
அதாவது மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்கு முன்னதாக தங்கர் சமூகத்தை எஸ்டி பிரிவில் சேர்ப்பது குறித்து மகாராஷ்டிரா அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கிடைத்த உடன் தான் நான்கு பேரும் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உயிர் தப்பினர்: இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க 2018ம் ஆண்டிலேயே மகாராஷ்டிர அரசு தலைமைச் செயலகத்தில் வலை ஒன்றை அமைத்திருந்தது. சரியாக அந்த வலையில் இவர்கள் மூன்று பேரும் குதித்ததால் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. அவர்கள் வலையில் இருந்து மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு ஏறும் வீடியோவும் இப்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கு வந்த நிலையில், அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பழங்குடியின எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த தங்கர் சமூக விவகாரம் பெரிதாக வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.
பின்னணி என்ன: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை இப்போது தங்கர் சமூகத்தினர் ஓபிசி பிரிவில் உள்ளது. இருப்பினும் தங்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் தங்களை எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் தங்கர் சமூகத்தினர் பழங்குடியின பிரிவிலேயே இருப்பதாகவும் மகாராஷ்டிர அரசும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் இதர பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இப்படி 3வது மாடியில் இருந்து எல்லாம் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிர தேர்தல்: மகாராஷ்டிராவில் இப்போது பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இணைந்து ஆட்சியில் உள்ளது. அதேநேரம் அங்குக் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபியும் எதிர்க்கட்சிகள் வரிசையில் பலமாக உள்ளது. இதனால் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications