பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா ஜாதி... மகாராஷ்டிரா அரசு அதிரடி
மும்பை: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா ஜாதியினரும் இனி பயனடையலாம் என மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கு 2018-ல் 16% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என தீர்ப்பளித்தது.
ஐந்து நட்சத்திர ஓட்டலின் சாதாரண பிரிட்ஜில் கோவிட் வேக்சின்.. கண்டுபிடித்து ஷாக் ஆன மும்பை மேயர்!
மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதேநேரத்தில் கல்வியில் 13% இடஒதுக்கீடு; வேலைவாய்ப்பில் 12% இடஒதுக்கீடு எனவும் மும்பை உயர்நீதிமன்றம் மாற்றி அமைத்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வே கருத்துகளை முன்வைத்திருந்தது. இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்தது. இதுநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மராத்தா இடஒதுக்கீடு செல்லாது - தீர்ப்பு
உச்சநீதிமன்றம் ஏற்கனவே மண்டல் கமிஷன் வழக்கின் தீர்ப்பில், மாநிலங்களின் இடஒதுக்கீடு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என கூறியிருந்தது. இந்த தீர்ப்பை மீறுவதாக இருப்பதால் மகாராஷ்டிராவின் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என்றது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா
இது மகாராஷ்டிரா அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக பின்பற்றப்படும் 10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா ஜாதியினர் பயனடைவர்; ஆண்டு வருமான ரூ8 லட்சத்துக்கு கீழே உள்ளவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியும் என அறிவித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.