மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. சிவசேனா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக பாஜக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்கும் உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே கோவா தலைநகர் பனாஜியில் முகாமிட்டுருந்தார். பின்னர் பனாஜியில் இருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் கடிதத்துடன் ஆளுநர் கோஷ்யாரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனால் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது.இந்தநிலையில் ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் பட்னாவிஸ், பால் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. 2019ல் பாஜக ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். இப்போதும் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும். நான் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். ஆனால், அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். இன்று மாலை 7.30 மணியளவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார். பதவியேற்ற பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று அறிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தது போல ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் ஏக்நாத் ஷிண்டே.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது. இதன்மூலம் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக இருக்கிறார் என்றும், மக்கள் மத்தியில் சமூக சூழலை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சிவசேனா கட்சியை பலவீனப்படுத்தும் பாஜகவின் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. சிவசேனா நிர்வாகிகள் உற்சாக முழக்கமிட்டனர். ஜெய் சிவாஜி.. ஜெய் பவானி என உற்சாக முழக்கமிட்டனர்.