துரத்தும் டெல்டா பிளஸ்.. மகாராஷ்டிராவில் முதல் உயிரிழப்பு.. மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு டெல்டா பிளஸ் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் சற்றே நிம்மதி ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும்கூட புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் உயிரிழப்பு
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கமேஸ்வர் பகுதியைச் சேர்ந்த 80 வயது பெண் டெல்டா பிளஸ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்றும் அவருக்கு வேறு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு இருந்ததாக என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

20 டெல்டா பிளஸ் கேஸ்கள்
அதேபோல அங்கு டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம். நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் 20 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே விழிப்புணர்வு பணிகளை அம்மாநிலம் அதிகப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா
கொரோனா முதல் அலையிலும் சரி 2ஆம் அலையிலும் சரி மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மகாராஷ்டிரா இருந்தது. குறிப்பாகக் கடந்த மே மாதம் 2ஆம் அலை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து தற்போது தான் மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

நீட்டிக்கும் ஊரடங்கு
இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பும், புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவும் மகாராஷ்டிராவுக்குக் கூடுதல் சிக்கல் உருவாக்கியுள்ளது. இதனால் கொரோனா 3ஆம் அலை ஏற்படும் என அஞ்சப்படுவதால் level 3 கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வருவதாக சிவசேனா அரசு அறிவித்துள்ளது. புதிய டெல்டா பிளஸ் கொரோனா வேகமாகப் பரவுவதாகவும் நுரையீரலை எளிதாகத் தாக்குவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆன்டிபாடிகள் தடுப்பாற்றலும் குறைவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications