சஞ்சய் ரதோடுக்கு அமைச்சர் பதவி.. கொதித்தெழுந்த பாஜக நிர்வாகி.. பதவியேற்ற முதல் நாளிலேயே சலசலப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சராக பதவியேற்றுள்ள சிவசேனா கட்சியின் சஞ்சய் ரதோடுக்கு பாஜனதா நிர்வாகி ஒருவரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா அணி பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவியேற்றது. தொடர்ந்து முதல்வராக சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜனதா சார்பில் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்று கொண்டனர்.
அதைத்தொடர்ந்து உடனடியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக ஒரு மாத காலம் ஆகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.
நுபுர்சர்மாவுக்கு ஆதரவு.. இளைஞரை கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டிய கொடூரம்.. ஷாக்கில் மகாராஷ்டிரா
அமைச்சரவை விரிவாக்கம்
இதனால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைச்சரவை விரிவாக்கம் விவகாரத்தில் ஆளும் கூட்டணியை வசைபாடி வந்தது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இன்று 18 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஏக்னாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியை சேர்ந்த 9 பேருக்கும், பாஜனதாவை சேர்ந்த 9 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர்களில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரதோடுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இளம்பெண் தற்கொலை வழக்கில் தொடர்பு
சஞ்சய் ரதோட் ஏற்கனவே, கடந்த உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, டிக்-டாக்கில் பிரபலமான பூஜா சவான் (வயது23) என்ற இளம்பெண் தற்கொலைக்கு சஞ்சய் ரதோட் மீது குற்றம் சாட்டப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக, சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என்று விடாப்பிடியாய் இருந்தது. கடும் எதிர்ப்புகளையடுத்து, வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
சஞ்சய் ரதோடுக்கு பாஜகவே எதிர்ப்பு
இந்த நிலையில், தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அரசில் இன்று பதவியேற்ற அமைச்சர்களில் சஞ்சய் ரதோட் பதவியேற்று இருப்பதற்கு பாஜகவில் இருந்தே கலகக்குரல் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா பாஜகவின் துணைத்தலைவர் சித்ரா வாக் இன்று தனது டிவிட்டர் பதிவில் சஞ்சய் ரதோடிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். சித்ரா வாக் வெளியிட்டு இருக்கும் பதிவில், ' சஞ்சய் ரதோட் மீண்டும் அமைச்சராக பதவியேற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பூஜா சவான் தற்கொலைக்கு காரணமானவனருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராவத்திற்கு எதிரான எனது போராட்டத்தை நான் கைவிட போவது இல்லை. நான் நீதியின் கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
அவருக்கு தொடர்பு இல்லை
அமைச்சரவை விரிவாக்கம் நடந்த முதல் நாளே சஞ்சய் ரதோட் விவகாரத்தால் பாஜகவின் முக்கிய நிர்வாகி கலகக்குரல் எழுப்பியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சஞ்சய் ரதோட்டிற்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள ஏக்நாத் ஷிண்டே, ''முந்தைய அரசு இருக்கும் போது, பூஜா சவான் தற்கொலை விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிப்பவர்களிடம் நாங்கள் பேசுவோம்'' என்றார்.
சஞ்சய் ரதோட்டிற்கும் தொடர்பு இல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள திக்ரஸ் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏவான சஞ்சய் ராதோட், டிக் டாக் பிரபலமாக இருந்த பூஜா சவான் நெருக்கமான உறவுடன் இருந்ததாகவும் பின்னர் இந்த உறவில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, இந்த தற்கொலைக்கும் சஞ்சய் ரதோட்டிற்கும் தொடர்பு இல்லை எனக்கூறியது.