ஓ மை காட்.. தனியார் நிறுவனத்தில் திருடி ரூ.15 கோடியை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணக்காளர்! எப்படி?
மும்பை: மும்பையில் பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து திருடிய ரூ.15 கோடியை ஆன்லைன் சூதாட்டத்தில் கணக்காளர் ஒருவர் பறிகொடுத்த பதறவைக்கும் சம்பவம் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் சிலருக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுத்தாலும் கூட ஏராளமானவர்கள் பணத்தை பறிகொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அதிகளவில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டில் ஈடுபட்டு இழப்பை சந்திக்கும் நபர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் தற்போது வரை ஆன்லைன் சூதாட்டம் என்பது தடை செய்யப்படவில்லை.
பீஸ் கட்டுற காசு போச்சு! ஆன்லைன் ரம்மியால் 75 ஆயிரம் காலி! பயத்தில் விஷம் குடித்த கல்லூரி மாணவன்!
மும்பையில் சம்பவம்
இந்நிலையில் தான் மும்பையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி போன நபர் ரூ.15 கோடியை பறிகொடுத்துள்ளார். சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்த அந்த நபர் தான் பணியாற்றும் நிறுவனத்தின் பணத்தை திருடி பறிகொடுத்து தலைமறைவாகி உள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
பங்கு சந்தை நிறுவனம்
மும்பை மேற்கு போரிவிலியில் உள்ள சிம்பாலி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை சேதன் ஷா தனது சகோதரர் பரேஷ் ஷாவுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் கபில் ராமன்லால் குந்த் என்பவர் பணியாற்றி வந்தார். கணக்காளராக இவர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 14 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் உரிமையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
தலைமறைவு
இந்நிலையில் தான் நிறுவனத்தின் வங்கி கணக்கு விவரங்கள் நிறுவனம் சார்பில் திடீரென்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உரிய அனுமதியின்றி சமீபத்தில் ரூ.30 லட்சம், ரூ.60 லட்சம் ஆகியவை கபில் ராமன்லாலின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி கபில் ராமன் லாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் சரியாக பதில் அளிக்காத நிலையில் தலைமறைவானார்.
ரூ.15.37 கோடி மாற்றம்
இதையடுத்து வங்கி கணக்கு தொடர்பான ஆய்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2021 ஜனவரியில் இருந்து நிறுவனத்தில் வங்கி கணக்குகளில் இருந்து கபில் ராமன்லால் தனது வங்கி கணக்குக்கு பலமுறை பணப்பரிமாற்றம் செய்திருந்தது தெரியவந்தது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022 செப்டம்பர் வரை ரூ.15.37 கோடி வரை தனது வங்கிகணக்குக்கு மாற்றம் செய்து திருடியது தெரியவந்து.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு
இதுபற்றி போரிவலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். கபில் ராமன்லாலின் வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் வெறும் ரூ.16 ஆயிரம் மட்டுமே இருந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கபில் ராமன்லால் ஆன்லைன் சூதாட்டில் அனைத்து பணத்தையும் இழந்ததும் தெரியவந்தது. இதனை கேட்டு தனியார் நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கபில் ராமன்லாலை போலீசார் தேடி வருகின்றனர்.