சஞ்சய் ராவத்தை ஆக.4 வரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மும்பை: சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 4-ந் தேதி வரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு மிக நெருக்கமானவர் சஞ்சய் ராவத். உத்தவ் தாக்கரே ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்க தீவிரமாகப் போராடிப் பார்த்தவர். அப்போது பத்ரா சால் மோசடி விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்ததது. மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. முதலில் இந்த சம்மனை ஏற்க மறுத்த சஞ்சய் ராவத் பின்னர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனாலும் அப்போதே சஞ்சய் ராவத் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சஞ்சய் ராவத்- காவலில் எடுக்க அமலாக்கத்துறை திட்டம்
வழக்கம் போல இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே சஞ்சய் ராவத் விமர்சித்து வந்தார். இந்நிலையில் நேற்றும் பத்ரா சால் நில மோசடி வழக்கில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 9 மணிநேரம் நடந்தது. இந்த 9 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் ராவத், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மும்பை நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இவ்வழக்கின் ஆதாரங்களை சஞ்சய் ராவத் அழிக்க முயற்சித்தார் என அமலாக்கப் பிரிவு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சஞ்சய் ராவத் தரப்போ, இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என சுட்டிக்காட்டினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தனர்.