ஆட்சியை பிடிக்க கட்சிகள் அறிவிக்கும் இலவசத்திற்கு..அரசு கடனில் மூழ்கணுமா? ஆவேசமான நிர்மலா சீதாராமன்
மும்பை: இலவசங்கள் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல அரசியல் திட்டங்களை அறிவித்து வருகிறது. இது மக்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் இலவசங்கள் கொடுத்த வரிப்பணத்தை வீணாக்க கூடாது என்றும் சரியாகத் திட்டமிட்டு உரியத் திட்டங்களைச் செயல்படுத்தினால் மக்கள் அதிக பலனைப் பெறுவார்கள் எனக் கூறி வருகிறது.

நிர்மலா சீதாராமன்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் கூட வழக்கு நடந்து வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தேர்தல் சமயத்தில் இலவசங்கள் குறித்து வாக்குறுதி எதையாவது அறிவித்தால் அது சம்மந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாகும். பொறுப்புள்ள கட்சியாக ஆட்சிக்கு வந்த பிறகு, பட்ஜெட்டில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வாக்குறுதிகள்
மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, பல்வேறு மாநிலங்களும் நிலுவைத் தொகையை வைத்துள்ளன. இலவச மின்சாரத்தை அறிவிக்கும் பல்வேறு மாநில அரசுகள் நிலுவைத் தொகையை மாநில மின் வாரியங்களுக்கு மீது சுமத்துகின்றன. அவர்கள் ஏன் அந்த சுமையைச் சுமக்க வேண்டும்? மின் வாரியங்கள் எதுவும் தேர்தலைச் சந்தித்து இலவச மின்சாரம் குறித்து வாக்குறுதியை அளிக்கவில்லை.

கடன்
மக்களுக்கு அவை வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால், கடன் சுமை மட்டும் மின் வாரியங்கள் மீது சுமத்தப்படுகின்றன. கடனில் தத்தளிக்கும் மின் வாரியங்களுக்கு சப்ளேவை தொடரக் கூட முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இப்போது நாடு முழுக்க எழுந்துள்ள விவாதம் என்பது இலவசங்கள் பற்றியது இல்லை. ஆனால் நீங்கள் வாக்குறுதி அளித்திருந்தால், அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் தான் செய்ய வேண்டும்.

விவாதம் தேவை
இலவசங்கள் விஷயத்தில் நாம் உரிய விவாதம் நடத்த வேண்டும். வறுமையிலிருந்து ஒருவரை மீட்க வேண்டியது அரசின் கடமை தான். மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திட்டங்களை அரசு அறிவிக்கலாம். அது முக்கியமானதும் கூட.! ஆனால் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து அரசு நிறுவனங்களைக் கடனில் தள்ளக் கூடாது. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இது தொடர்பாக நாடு முழுவதும் விவாதம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
கடந்த மாதம் பிரதமர் மோடி நாட்டில் அதிகரிக்கும் இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இலவச கலாச்சாரத்திற்கு எதிராகப் பிரதமர் மோடி தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். முன்னதாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி புந்தேல்கண்ட் விரைவுச் சாலையைத் திறந்து வைத்தபோது இலவச கலாச்சாரம் நீண்ட கால வளர்ச்சியைப் பாதிப்பதாகப் பிரதமர் மோடி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications