செல்ஃபி மோகத்தால் வந்த வினை! குரங்குடன் போட்டோ எடுக்க முயன்று உயிரைவிட்ட வாலிபர்.. புனேயில் சோகம்
மும்பை: குரங்குகளுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு 500 அடி பள்ளத்தில் விழுந்து மகராஷ்டிர மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. செல்பி மோகத்தால் எத்தனையோ உயிரிழப்புகள் இருந்தாலும் தற்போதும் திருந்தாத பலரும் சமூக வலைத்தள லைக்கிற்காக இப்படி ஆபத்தை உணராமல் சாகச செல்பி எடுத்து உயிரை பறிகொடுக்கும் சம்பவங்கள் குறைந்த பாடில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய ஸ்மார்ட் போன் காலத்தில் புகைப்படங்கள் எல்லாம் மலிந்து போய்விட்டது. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ஸ்டூடியோவிற்கு சென்று போட்டோ எடுத்துக்கொண்ட காலம் போய் செல்போனிலே நினைத்த நேரத்தில் எத்தனை போட்டோக்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு காலம் மாறிவிட்டது.
அதுவும் நினைவலைகளாக புகைப்படத்தை பார்த்து மகிழ்ந்த காலம் போய், இப்போது சமூக வலைத்தளங்களில் லைக் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

செல்பி மோகம்
மற்றவர்களை விட வித்தியாசமான முறையில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஓடும் ரயிலில் இருந்தபடி செல்பி எடுப்பது.. தண்டவாளத்தில் நின்றபடி செல்பி எடுப்பது.. என ஆபத்தை உணராமல் எடுத்துக் கொண்டு விபத்திலும் சிக்கி உயிரை பறிகொடுக்கும் சோக சம்பவங்களும் இதனால், நடந்தேறி விடுகின்றன. இன்னும் வனவிலங்குகளிடம் நின்று கொண்டு செல்பி எடுப்பது, பைக்கில் செல்லும் போது செல்பி என வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட முயன்று அடிபட்டுக்கொள்வது அல்லது மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது என செல்பி மோகம் பெரும் இன்னல்களை கொடுத்தாலும் திருந்துவது இல்லை.

குரங்குகளுடன் செல்பி எடுக்க ஆசை
சமூக வலைத்தளங்களில் பெறும் லைக்க்கிற்காகவும் பெருமை அடித்துக்கொள்ளவும் இதுபோல ஆபத்தான விபரீத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என எத்தனையோ விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் திருந்தியபாடில்லை. தொடர்ந்து இதுபோல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் குரங்குகளுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு 500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரை பறிகொடுத்த துயர சம்பம் நடைபெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குரங்குகள் கூட்டம்
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வரந்தா மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியின் சாலை வழியாக அப்துல் ஷாயிக் என்பவர் கோன்கன் பகுதிக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இருந்து இருக்கின்றன. இதை கவனித்த அப்துல் ஷாயிக், அதனுடன் இணைந்து செல்பி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிடலாம் என்று ஆசைப்பட்டுள்ளார்.

500 அடி பள்ளத்தில் விழுந்தார்
இதற்காக அங்கேயே சாலை ஓரம் காரை நிறுத்திய அப்து ஷாயிக் குரங்குகளுடன் செல்பி எடுக்க தயாரானார். குரங்குகள் பக்கத்தில் சென்று செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய அப்துல் ஷாயிக் 500 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார். கார் தனியாக நிற்பதை பார்த்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் அப்துல் ஷாயிக் உடலை மீட்டனர்.

போலீஸ் விசாரணை
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்பி மோகத்தால் எத்தனையோ உயிரிழப்புகள் இருந்தாலும் தற்போதும் திருந்தாத பலரும் சமூக வலைத்தள லைக்கிற்காக இப்படி ஆபத்தை உணராமல் சாகச செல்பி எடுத்து உயிரை பறிகொடுக்கும் சம்பவங்கள் குறைந்த பாடில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications