தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் .. கலெக்டர் அதிரடி.. எங்கு தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.

26வது இடம்
இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று பின்தங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெறும் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்டத்தில் பலரும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இதையடுத்து அவுரங்காபாத் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமையல் கேஸ்
அதில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சமையல் கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழப்பு
தடுப்பூசி போட வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்த காரணம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு குறைவு என்பது தான். கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் தடுப்பூசி இரு தவணையும் செலுத்தியோரில் ஒருவர் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்தாதோரில் 16 பேர் மோசமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேரிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

20 மடங்கு
அதேபோல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், தடுப்பூசி செலுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது செலுத்தாதவர்கள் 20 மடங்கு கொரோனாவால் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications