விவசாயிகளிடம் செய்யும் கெடுபிடியை.. லடாக்கில் காட்டியிருந்தால் சீனா உள்ளே வந்திருக்காது- சிவ சேனா
மும்பை: இந்திய தேசியக் கொடியை அவமானப்படுத்தியது விவசாயிகள் கிடையாது, அதை செய்வது எல்லையில் சீன ராணுவம் தான், என்று மத்திய அரசுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளது சிவசேனா கட்சி.
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகளில் ஒரு பிரிவினர் செங்கோட்டைக்கு சென்று அங்கு தங்களது கொடியை ஏற்றியதாக, சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.
அங்கு ஏற்றப்பட்டிருந்த நமது மூவர்ணக் கொடியை, விவசாயிகள் இழிவு செய்து விட்டதாக பாஜகவை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விவசாயிகள் அவமரியாதை செய்யவில்லை
இந்த நிலையில்தான் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் 'சாம்னா'-வில் இன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், விவசாயிகள் யாரும் இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்யவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது, என்பதை நீங்களே பாருங்கள்: பாஜகவை சேர்ந்தவர்கள், விவசாயிகள்தான் தேசியக்கொடியை அவமரியாதை செய்து விட்டதாக ஒரு கட்டுக்கதையை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.
கட்டுக் கதை
ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் சட்டத்தை மீறி போராட்டத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த போராட்டமே நாட்டுக்கு எதிரானது என்பதைப் போல உருவாக்கப்படும் கட்டுக்கதைகள் சரியானது கிடையாது. டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது வாகனங்களில் இந்திய மூவர்ண கொடியை கட்டியிருந்தனர். அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும், இந்திய தேசிய கொடியின் மீதும் பாஜகவின், "இணையதள ராணுவத்தினரை" விடவும் அதிகமான மரியாதை உள்ளது.
விவசாயிகளின் பிள்ளைகள்
விவசாயிகளை தொடர்ந்து சாலையோரமாக போராட விட்டு அவர்கள் சாவுக்கு காரணமாக இருப்பது தான் உண்மையிலேயே மூவர்ணக் கொடிக்கு செய்யப்படும் அவமரியாதை. இதை அரசு உணர வேண்டும். நமது எல்லையில் தங்களது உயிரை துச்சமென மதித்து ராணுவ வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ய இரவும் பகலும் காவல் புரிந்து வருகிறார்கள். அதில் பலரும் இந்த விவசாயிகளின் பிள்ளைகள்தான். நாட்டுக்காக தியாகம் செய்வதற்கு ராணுவ வீரர்களை உருவாக்கிய இந்த விவசாய பெற்றோர்கள் எப்படி இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்து இருப்பார்கள்? இவ்வாறு குறிப்பிட்டுள்ள சாம்னா நாளிதழ் கட்டுரையில், டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு காட்டக்கூடிய கெடுபிடிகள் பற்றியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
சீனா நுழைந்திருக்காது
டெல்லி எல்லையில், மத்திய அரசால் செய்யப்படும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லைப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்தால் நமது எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இருக்கவே முடியாது. நமது எல்லைக்குள் அமர்ந்துகொண்டு சீன ராணுவம் தான் நமது மூவர்ண கொடியை அவமரியாதை செய்கிறதே தவிர விவசாயிகள் கிடையாது. மூவர்ண கொடி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும். லால் சவுக் பகுதியில் முரளி மனோகர் ஜோஷி தலைமையில், நமது தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது அந்த பாஜக குழுவுக்கு தலைமை ஏற்று சென்றவர் இப்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான் என்பதை நாங்களும் அறிவோம்.
தேசியக் கொடி
தேசியக்கொடி முக்கியமானது. எனவேதான் இந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 7.1 சதவீதம் அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தவறாக சித்தரிக்க கூடாது. இவ்வாறு சிவசேனா நாளிதழ் சாம்னா, தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்கி பாத் என்ற வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, செங்கோட்டையில் தேசியக்கொடி அவமரியாதை செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் இது போல ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.