2005 வரலாறு திரும்புகிறது.. மும்பையில் நாளை முதல் வியாழக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்
Recommended Video
சென்னை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை நினைவுப்படுத்துகிறது. நாளையும் நாளை மறுநாளும் மும்பையில் கனமழை பெய்யக் கூடும்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பலி
இந்த மழையால் மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா என்ற இடத்தில் குடிசை வீடுகள் இடிந்ததில் 18 பேர் பலியாகிவுள்ளனர். இது போல் பல்வேறு காரணங்களால் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.. மீட்பு பணிகள் தீவிரம்.. இன்று பொது விடுமுறை அறிவிப்பு
வரலாறு
இந்த கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு மும்பையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் பதிவான மழையின் அளவு 400 மி.மீ. ஆகும். அது போன்ற பேய் மழை இந்த முறையும் பெய்து 2005-ஆம் ஆண்டு வரலாற்றை நினைவுப்படுத்துகிறது.
பருவக்காற்று
கடந்த 2 மணி நேரமாக மழை சற்று ஓய்ந்துள்ளது. எனினும் இது மீண்டும் பெய்யும். பின்னர் மதியம் முதல் மாலைக்குள் குறையும். வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அரபிக் கடலோரத்தில் உள்ள பருவக்காற்று வலுவடைந்துள்ளது.
பிரதீப் ஜான்
இதனால் மழை அதிகமாக இருக்கிறது. எனவே நாளையும் நாளை மறுநாளும் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனது பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களில் மும்பையில் பதிவான மழையின் அளவு: கடந்த 29-ஆம் தேதி 235 மி.மீ., 30-ஆம் தேதி 93 மி.மீ., ஜூலை 1-ஆம் தேதி 92 மி.மீ., 2-ஆம் தேதி 375 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.