ஏக்நாத் ஷிண்டே கோட்டையில் இருந்து துவக்கம்.. மகாராஷ்டிரா முழுவதும் யாத்திரை.. உத்தவ் தாக்கரே அதிரடி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் யாத்திரை தொடங்க உள்ளதாகவும், அதில் முதலாவதாக ஏக்னாத் ஷிண்டேவின் கோட்டையான தானேயில் இருந்து தொடங்க இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் தலமையிலான பாஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.
ஆனால் முதல்வர் பதவி பிரச்சினையில் பாஜனதாவுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அதிரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவியேற்றார்.
இரண்டாக பிரிந்த சிவசேனா
2 ஆண்டுகளை கடந்து ஆட்சி நடந்துவந்த நிலையில், திடீரென சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை திரட்டி உத்தவ் தாக்கரேக்கு எதிராக திரும்பினார். தொடர்ந்து சிவசேனா அதிருப்தி அணியாக உருவாகிய ஏக்னாத் ஷிண்டே பாஜனதாவுடன் கூட்டணி வைத்து மமாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்றார். இதனால் சிவசேனா அணி இரண்டாக பிரிந்தது.
மாநிலம் முழுவதும்
இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்தநிலையில் உடைபட்ட சிவசேனாவை சீரமைக்க முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். அதன்படி மாநிலம் தழுவிய அளவில் மகா பிரபோதன் யாத்திரையை உத்தவ் தாக்கரே தொடங்க உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மேற்கொண்டு ஆதரவு திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியில்..
இதில் முதலாவதாக, ஏக்நாத் ஷிண்டேவின் சொந்த தொகுதியாகவும் அவரது கோட்டையாகவும் கருதப்படும் தானேவில் இருந்து இந்த யாத்திரையை உத்தவ் தாக்கரே தொடங்க இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியில் இருந்து இந்த யாத்திரையை உத்தவ் தாக்கரே தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
பரபரப்பு
ஷிண்டே அணியினருடன் இணைந்து மகாராஷ்டிராவில் 45 மக்களவை தொகுதிகளிலும் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், உத்தவ் தாக்கரேவின் இந்த யாத்திரை பற்றிய அறிவிப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாநிலத்தின் முதல்வராக இருக்கும் எக்நாத் ஷிண்டே தானே மாவட்டம் கோப்ரி-பச்பகடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பல முறை அங்குள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால், தானே மாவட்டம் அவரது கோட்டையாக கருதப்படுகிறது.