'கொரோனா காலத்தில் ரூ 36,000 கோடி நஷ்டம்.. பயணிகள் ரயில்களால் எப்போதும் இழப்புதான்..' மத்திய அமைச்சர்
மும்பை: கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் இந்திய ரயில்வே துறைக்கு ரூ 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், அந்த காலகட்டத்தில் சரக்கு ரயில் சேவை மூலம் மட்டுமே ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்ததாகவும் ரயில்வே இணை அமைச்சர் ராசாஹேப் டான்வே தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பயணிகள் ரயில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை பல மாதங்கள் அமலிலிருந்தது.
கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய பின்னரே ரயில் சேவை மெல்ல மீண்டும் தொடங்கப்பட்டது. முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது.

ரூ 36 ஆயிரம் கோடி நஷ்டம்
அதேநேரம் இன்னும்கூட பயணிகள் ரயில் சேவை முழு வீச்சில் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா காலத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை மத்திய இணை அமைச்சர் ராசாஹேப் டான்வே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்து, அமைச்சர் ராசாஹேப் டான்வே பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார்.

எப்போதும் நஷ்டம் தான்
இது குறித்து அமைச்சர் ராசாஹேப் டான்வே கூறுகையில், "இந்திய ரயில்வே துறைக்குப் பயணிகள் ரயில் என்பது நஷ்டத்தில் இயங்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. ரயில் கட்டணத்தை அதிகரித்தால் ரயில்களில் பயணிப்போர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதை எங்களால் செய்ய முடியாது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஒரே லாபம்
அந்த காலகட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலம் மட்டுமே ரயில்வே துறைக்கு வருமானம் கிடைத்தது. கொரோனா உச்சத்திலிருந்த சமயத்திலும்கூட ஆக்சிஜன் தொடங்கி பல்வேறு சரக்குகளை ஏற்றிச் சென்றதில் ரயில்களின் பங்கு அளப்பரியது" என்று ரயில்வே துறை இணை அமைச்சர் ராசாஹேப் டான்வே தெரிவித்தார்.

புல்லட் ரயில் திட்டம்
தொடர்ந்து புல்லட் ரயில் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் ராசாஹேப் டான்வே, "இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையை ஒட்டியே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும் வகையிலான சிறப்புச் சரக்கு ரயில் பாதை பணிகளையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. மேலும், சாத்தியமான இடங்களில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்தியன் ரயில்வே
இந்தியாவில் கொரோனா தொடங்கிய போது ரயில் மட்டுமின்றி அனைத்து விதமான பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. பல மாதங்கள் வரை தொடர்ந்த இந்தத் தடை படிப்படியாகவே விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கவில்லை என்றாலும் கூட, அனைத்து மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்தன. அந்த சமயத்தில் டெல்டா கொரோனாவால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பினர். பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதைச் சமாளிக்க ரயில்கள் மூலம் ஆக்சிஜனை ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications