நவராத்திரி 'கர்பா' நடனம்.. மயங்கி விழுந்து பலியான மகன்! அதிர்ச்சியிலேயே இறந்த தந்தை.. கொடுமை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 'கர்பா' நடனம் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் உயிரிழந்ததாக அறிவித்த நிலையில், அவரது தந்தையும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனால் அம்மாநிலம் முழுவதும் பெரும் சோகம் நிலவி வருகிறது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு
நடனம்
'கர்பா' என்பது குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமாகும். நவராத்திரி திருவிழாவையொட்டி இந்த நடனம் ஆடப்படுகிறது. சக்தி தேவியை மனதில் நினைத்து சுற்றி சுழன்று ஆடும் முறைதான் கர்பா. அதாவது இஸ்லாமியர்களின் சூஃபி நடனத்தை போலவே இது இருக்கும். எரியும் விளக்கின் திரியை போலவே நாமும் சுழன்று எரிய வேண்டும் என்பதால் இந்த நடனம் ஆடப்படுகிறது. பிறப்பு, வாழ்க்கை, இறப்பு மீண்டும் பிறப்பு என்பதை இந்த நடனம் வெளிப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
மயக்கம்
இந்நடனம் குஜராத் மட்டுமல்லாது, குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் கர்பா நிகழ்ச்சி நடந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று ஆடியுள்ளனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மனிஷ் நாராப்ஜி சோனிக்ரா என்பவர் நடனம் ஆடும்போது சுருண்டு விழுந்துள்ளார். இதனை எதிர்பாராத மக்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்.
உயிரிழப்பு
ஆனால் சோனிக்ரா மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் சோனிக்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சோனிக்ராவின் தந்தை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து அழுதுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை வீட்டுக்கு போகலாம் வாங்க என அழைத்துள்ளனர். ஆனால் தந்தை சரிந்து விழுந்துள்ளார்.
தந்தையும் பலி
உடனடியாக மருத்துவரை அழைத்து பரிசோதித்தபோது சோனிக்ராவின் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது மகன் இறந்த செய்தியறிந்து அதே இடத்தில் தந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல குஜராத் மாநிலம் ஆனந்த் எனும் இடத்தில் கர்பா நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் பங்கேற்று நடனமாடிய இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.