'இரட்டை இலை' சுகேஷ் சர்ச்சையில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி- அந்த 18 லட்ச ரூபாய் கிப்ட்தான் காரணமாம்!
மும்பை: சர்ச்சைக்குரிய புரோக்கரான ரூ200 கோடி மோசடியில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் சுகேஷ் சந்திரசேகர் விவகாரத்தில் மீண்டும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணமே சுகேஷிடம் இருந்து ஜான்வி வாங்கிய ரூ18 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்தான் என கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெயர் சுகேஷ் சந்திரசேகர். அதிமுகவில் டிடிவி தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களும் கலகக் குரல் எழுப்பிய காலத்தில் பேசப்பட்ட நபர் சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை தமது அணி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன், சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து கொண்டே சுமார் ரூ200 கோடி மோசடியில் சுகேஷ் சந்திரசேகர் ஈடுபட்டதும் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து சுகேஷ் சந்திரசேகரின் பூர்வோத்திரம் அத்தனையும் அம்பலத்துக்கும் வந்தது.
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில்தான் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருக்கமாக இருந்தது; உல்லாசமாக இருந்தது; நடிகைகளுக்கு தூதுவிட்டு ஏமாந்த கதை என ஏகப்பட்ட லீலைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பெயரும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. ஜான்வி கபூர் தரப்பு, சுகேஷ் சந்திரசேகரை நேரில் சந்தித்ததே இல்லை என திட்டவட்டமாக ஏற்கனவே அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டது. இப்போதும் இதே தகவலைத்தான் ஜான்வி கபூர் தரப்பு தெரிவிக்கிறது.
அதேநேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி எனப்படுகிற லீனா பெங்களூர் நகரில் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைக்க வருமாறு ஜான்வி கபூரிடம் அனுமதி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஜான்வி கபூரும் கலந்து கொண்டார். இதில் பங்கேற்றதால் ஜான்வி கபூருக்கு ரூ18 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள் கிடைத்தது. இப்படியான பரிசுப் பொருள் கொடுத்து ஜான்வி கபூரை தமது வலையில் விழ வைக்க சுகேஷ் சந்திரசேகர் திட்டம் தீட்டினார் என்கின்றனர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள். இத்தனை லட்சம் பெறுமதியான பரிசுப் பொருளை ஜான்வி கபூர் ஏன் பெற்றார் என்ற கேள்விகளுக்கு மட்டும் விடை இல்லை எனவும் ஒருதரப்பு சொல்கிறது.












Click it and Unblock the Notifications