மியான்மர்: ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. முழு விவரம்!
யாங்கூன்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
2021-ம் ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.
ஆங் சான் சூகியின் நிலைமை பரிதாபம்
ஆங் சான் சூகி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வீட்டுக்காவலில் உள்ளார். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி கொரோனா வைரஸ் விதிகளை மீறியதற்காக ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ராணுவத்தின் இந்த அடாவடி நடடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்தது. சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் இந்த தண்டனை இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது,
மேலும் 4 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மரில் உள்ள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உரிமம் இல்லாத வாக்கி-டாக்கிகளை வைத்திருந்தது உட்பட பல குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ராணுவம் ஆட்சியை கவிழ்த்த சில நாட்களுக்குப் பிறகு ஆங் சான் சூகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
வாக்கி-டாக்கிகள் தொடர்பான வழக்கு
அப்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆறு வாக்கி-டாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவம் வழக்கு தொடர்ந்தது. இதற்குதான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கையடக்க ரேடியோக்களை வைத்திருந்ததன் மூலம் ஏற்றுமதி-இறக்குமதி சட்டத்தை மீறியதற்காகவும், சிக்னல் ஜாமர்களை வைத்திருந்ததற்காகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் தொடர் போராட்டம்
சூ கியின் ஆதரவாளர்கள் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளனர். அவர் மீதான வழக்குகள் ஆதாரமற்றவை என்றும் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த வழக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள். மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சிதான் வேண்டும், அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சி வேண்டாம் என்று கோரி அவர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.