கஜா புயல் சேதம்.. இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது மத்தியக்குழு!
கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய ஆய்வுக்குழு இன்று நாகை மற்றும் காரைக்கால் செல்ல இருக்கிறது.
நாகப்பட்டினம்: கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய ஆய்வுக்குழு இன்று நாகை மற்றும் காரைக்கால் செல்ல இருக்கிறது.
தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு கஜா புயல் பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. முதல் நாள் இந்த ஆய்வுக்குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்தது. அதன்பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது.
இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் ஆய்வு செய்தது. நேற்று தஞ்சையில் சேதம் அடைந்த வயல்களில் சென்று பார்வையிட்டது. விவசாயிகளிடம் புயல் சேதம் குறித்து கேட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் விழுந்த தென்னை மரங்கள், இடிந்து விழுந்த வீடுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். அதேபோல் தஞ்சாவூரில் ஒரத்தநாட்டில் ஏற்பட்டு இருக்கும் சேதங்களை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் கஜா சேதம் குறித்து ஆராய மத்தியக்குழு இன்று நாகை, காரைக்காலில் செல்ல உள்ளது. இன்று மாலை வரை அங்கு ஆய்வு செய்ய உள்ளது.
அதே சமயம் இந்த ஆய்வுக்குழு முக்கியமான பல கிராமங்களில் சோதனை செய்யவில்லை. ஊருக்குள் வரவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். தஞ்சாவூரில் இந்த குழுவிற்கு எதிராக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புயல் சேத ஆய்வு முடிந்த பின் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மத்தியக்குழு தெரிவித்து இருக்கிறது.