வாக்கு சாவடி அருகே.. பெண் போலீசை.. காது கொடுக்க முடியாதபடி திட்டிய திமுக எம்எல்ஏ.. ஷாக் வீடியோ
நாகர்கோவில்: பெண் போலீசை பார்த்து "லூசு" என்று திமுக எம்எல்ஏ ஆவேசமாக திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான சுரேஷ்ராஜன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில்தான் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாருடன் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
ஒருமையில் திட்டிய எம்எல்ஏ
ஒரு கட்டத்தில், "போலீஸ் மாதிரி பேசுறா.. லூசு மாதிரி பேசுறா" என்று பெண் போலீசை ஒருமையில் திட்டுகிறார் சுரேஷ்ராஜன். மேலும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு போன் போடுமாறு ஆதரவாளர்களிடம் சொல்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
பாஜகவுக்கு ஓட்டு
அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் யாரிடமோ போனில் பேசுகிறார். அந்தப் பெண் போலீஸ் பாஜகவுக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்துகிறார் அந்த ஆதரவாளர்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கண்டனங்கள்
போனில் பேசும் நபர் பூத் நம்பர் 159 என்று குறிப்பிட்டு யாரிடமோ புகார் அளிக்கிறார். அதற்கு முன்பாக அங்கு என்ன நடந்தது என்பது இந்த வீடியோவில் இல்லை. ஆனால் பெண் போலீசை பார்த்து. லூசு என்று ஒரு எம்எல்ஏ கூறும் காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இரவு, பகலாக வேலை
தேர்தல் தேதி அறிவித்தது முதல் காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகரித்து விட்டது. விஐபிகள் பிரச்சாரத்துக்கு வருகை தரும்போது தொலைதூர ஊர்களுக்கும் பணிக்காக சென்றுவிட்டு இரவு சாலையோரம் கூட தூங்கி தங்கள் கடமையை செய்துவந்தனர். இன்று தேர்தல் நாளிலும் அவர்களுக்கு கடுமையான பணிச்சுமை.
தீவிர பணிச்சுமை
இந்த கடும் வெயில் நடுவே பணியாற்றியபடி, சிறு சிறு மோதல்கள் உரசல்கள் என அனைத்தையும் அவர்கள் சமாளித்து செல்ல வேண்டிய நிலைமையில் இருந்தனர். இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியிருக்கும். தேர்தல் நெருங்கும் போது அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்படவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில் ஒரு எம்எல்ஏ, பணியில் இருக்கும் பெண் போலீசாரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்ட கூடிய காட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.