ரூ.14.96 லட்சம் பறிமுதல்! கிரிப்டோ முதலீடு கண்டுபிடிப்பு! அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டு ரெய்டு நிறைவு
நாமக்கல்: நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவு அடைந்துள்ளது. இந்த சோதனையின்போது ரூ.14.96 லட்சம், 214 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சத்தை கிரப்டோ கரன்சி, 1.60 கிலோ தங்க நகைகள், ரூ.1.20 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அசோக் நகரில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர். இவரது மனைவி உமா. கேபிபி பாஸ்கர் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல் எம்எல்ஏவாக இருந்தார். தற்போது நாமக்கல் நகர அதிமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடிக்கு சொத்துகள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. அதாவது அவர் தனது வருமானத்தை விட 315 சதவீதம் வரை சொத்து குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புபிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

30 இடங்களில் சோதனை
இதன் தொடர்ச்சியாக இன்று காலை நாமக்கல் அசோக் நகரில் உள்ள பாஸ்கர், அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களில் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நாமக்கல்லில் மொத்தம் 28 இடங்களில் சோதனை நடந்தது. மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முடிவடைந்த சோதனை
இந்த சோதனையின்போது வீடு, அலுவலகங்களில் உள்ள சொத்து பத்திரங்களின் விபரங்களை போலீசார் கேட்டறிந்தனர். மேலும் தங்கநகை, வெள்ளி பொருட்கள் மதிப்பீடப்பட்டன். அதோடு வீடு, அலுவலகத்தில் உள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த சோதனை இன்று மாலை 7 மணியளவில் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.

என்னென்ன சிக்கியது?
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.26.52 லட்சம் ரொக்கம், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 சொகுசு கார், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்களும் சிக்கியது. ரூ.20 லட்சம் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி முதலீடுகள் இருப்பதும், 1.60 கிலோ தங்க நகைகள், 6.62 கிலோ வெள்ளி பொருட்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.14.96 லட்சம், 214 ஆவணங்கள் பறிமுதல்
மேலும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ரூ.14.96 லட்சம், 214 ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். தற்போது கைப்பற்றப்ப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக இனி ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர்களை தொடர்ந்து மாஜி எம்எல்ஏ
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வளையத்துக்குள் சிக்கினர். இவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்த நிலையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இநு்நிலையில் தான் முதல் முதலாக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications