உக்ரைன் ஓவர்.. தைவான் ஸ்டார்ட்.. சீனாவிற்கு எதிராக தூண்டிவிடும் பிடன்.. அமெரிக்காவின் பரபர பிளான்
நியூயார்க்: உக்ரைன் போலவே தைவான் தாக்குதலுக்கு உள்ளானால் அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோவில்' சேர வற்புறுத்தியதில் உக்ரைன் மேற்கொண்ட முயற்சிகள் ரஷ்ய-உக்ரைன் போருக்கு அடித்தளமிட்டன.
தற்போது இதனைத் தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தைவானை தனி நாடாக அங்கீகரிப்பது போன்ற தோற்றைத்தை ஏற்படுத்தி ஆசிய கண்டத்தில் அமெரிக்கா மற்றொரு போருக்கு அடித்தளமிட முயற்சிப்பதாக பைடனின் இந்த கருத்து குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!
ரஷ்ய-உக்ரைன் போர்
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இருந்த 'சோவியத் யூனியன்' 1991ல் கலைக்கப்பட்ட பிறகு உக்ரைன் தனி நாடாக அறிவித்துக்கொண்டது. இதனையடுத்து இந்நாட்டை அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோவில்' சேர அமெரிக்க வற்புறுத்தியதில் இதற்கு இசைவு தெரிவித்து உக்ரைனும் சில முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இது ரஷ்ய-உக்ரைன் போருக்கு அடித்தளமிட்டுவிட்டது. தற்போது இரு நாடுகளின் போர் காரணமாக மூன்றாம் நாடுகள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
அமெரிக்க சபாநாயகரின் வருகை
இந்த சூழலில் தற்போது சீனாவின் ஒரு அங்கமாக கருதப்படும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் போக்கை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி சீனாவின் அனுமதியின்றி சமீபத்தில் தைவானுக்கு சென்றிருந்தார். இதனால் கோபமடைந்த சீனா, தைவான் கடற்பரப்பில் போர் விமானங்களை பயன்படுத்தி ராணுவ பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டது. இது உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா உதவும்
இதனைத் தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் போலவே தைவான் தாக்குதலுக்கு உள்ளானால் அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் என்று கூறியுள்ளார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு பிரிட்டன் சென்றிருந்த பைடன் 'சிபிஎஸ்' செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தைவான் எதிர்கொள்ளும் எதிர்பாராத தாக்குதலிருந்து அதனை பாதுகாக்க அமெரிக்கா உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.
பாதிப்பை ஏற்படுத்தும்
ஏற்கெனவே ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக கலக்கமடைந்துள்ள உலக நாடுகள் தற்போது ஆசிய பிராந்தியத்தில் புதியதாக போர் உருவாகும் சூழல் அழைந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கின்றன. ஏனெனில், உக்ரைன் போர் காரணமாக பணக்கார நாடான ஐரோப்பாவே சில நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், ஆசியா போன்ற ஏழை நாடுகள் கொண்ட கண்டத்தில் சீனா போன்ற முக்கிய நாடு போரில் இறங்குவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஒற்றை சீனா
இதற்கு முன்னர் வரை அமெரிக்கா 'ஒற்றை சீனா' எனும் கொள்கையைதான் கடைப்பிடித்து வந்திருக்கிறது. ஆனால் தற்போது தனது வெளியுறவு கொள்கையை முதன் முதலாக மாற்றியிருப்பது பைடனின் இந்த பேட்டி மூலம் தெளிவாக தெரிகிறது. 'ஒற்றை சீனா' நடைமுறையை தனது வெளியுறவு கொள்கைகளாக கொண்ட உலக நாடுகள், தைவான் சீனாவின் அங்கம் என்று ஒப்புக்கொண்டுள்ளது.