என்னது.. "கொலை செய்ய" 1 கோடி சம்பளமா! எட்றா வண்டிய.. அலற வைக்கும் அமெரிக்க அரசின் விளம்பரம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளை கொல்ல தனி வேலைவாய்ப்பே உருவாக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், எலியை துரத்தி அடித்து கொல்லும் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம் எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்.
எலிகளுக்கு பயந்து இப்படி விளம்பரம் வெளியிடும் அளவுக்கு உலக வல்லரசான அமெரிக்காவே தள்ளப்பட்டிருப்பதுதான் இப்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.
எனக்கு ஓட்டு போட்டா கொசுக்களை ஒழிப்பேன்.. எலிகளை பிடிப்பேன்.. அட்ராசிட்டி பண்ணும் சுயேட்சை வேட்பாளர்
அலறவிடும் எலிகள்
எலித் தொல்லையும், கொசுத் தொல்லையும் அனுபவித்தவர்களுக்குதான் தெரியும் என ஒரு பழமொழி உண்டு. அது நூறு சதவீதம் உண்மையும் கூட. வீட்டில் ஒரு எலி புகுந்துவிட்டாலே அது செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியாது. அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை கடித்து, உள்ளே இருப்பவற்றை தின்றுவிடும். வீட்டில் இருக்கும் துணிகளை கந்தல் கோலமாக்கிவிடும். வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் சேகரித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை எலிகள் துவம்சம் செய்யும் சம்பவங்களும் பல வீடுகளில் அரங்கேறியிருக்கும். ஒருசில எலிகளுக்கே இப்படி என்றால் லட்சக்கணக்கான எலிகள் ஒரு நகரில் இருந்தால் என்ன நடக்கும்? அதுதான் நியூயார்க்கில் நடந்தது கொண்டிருக்கிறது.
நியூயார்க்கின் இருண்ட பக்கம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் காலம் காலமாகவே அதன் அழகுக்கும், நவநாகரீக கலாச்சாரத்துக்கும் பெயர்போனது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நியூயார்க்குக்கு இருண்ட பக்கம் ஒன்றும் நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. அதுதான் அந்நகரில் இருக்கும் எலித் தொல்லை. பன்னெடுங்காலமாகவே நியூயார்க் நகரம் லட்சக்கணக்கான எலிகளின் புகலிடமாக இருக்கிறது. நியூயார்கில் வீடுகள், ரெஸ்டாரண்ட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நட்சத்திர ஓட்டல் என ஒன்று கூட எலிகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாது.
குவியும் புகார்கள்
இந்த எலிகளை ஒழிக்க நியூயார்க் நகர நிர்வாகமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பார்த்துவிட்டது. ம்ஹும்.. ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அந்த அளவுக்கு அங்கு எலிகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நியூயார்க்கில் எலித் தொல்லை 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மக்களிடம் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான எலித் தொல்லை புகார்கள் குவிந்து வருகின்றன.
எலியால் வந்த வேலைவாய்ப்பு
இதனால், நியூயார்க் அரசு அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி, எலிகளை பிடித்து கொல்வதற்காகவே தனி வேலைவாய்ப்பை நியூயார்க் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விளம்பரங்கள் அங்குள்ள பிரபல செய்தித்தாள்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதில், "எலிகளை கட்டுப்படுத்தவும், அவற்றை கொன்று அப்புறப்படுத்தவும் ஆட்கள் தேவை. இந்த வேலையில் சேர ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். எலிகளை துரத்துவதற்கு நல்ல உடல் ஆற்றலும் (stamina), கொலையாளிக்கான உள்ளுணர்வும் (Killer instinct) இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு ஆண்டுக்கு 1,7000 டாலர் அதாவது ரூ.1.13 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என நியூயார்க் மேயர் அலுவலகம் வெளியிட்ட விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.