அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. எப்படி தோன்றியது? ஏன் மின்னல் வேகத்தில் பரவுகிறது? அமெரிக்க ஆய்வாளர் பகீர்
நியூயார்க்: ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ள நிலையில், அது எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த முக்கிய தகவலை அமெரிக்க ஆய்வாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் வைரசைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இது வேகமாக மற்ற நாடுகளுக்குப் பரவும் போதிலும் கூட, இதனால் தீவிர பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை என்றே தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் பரவியது எப்படி?.. வெளியானது பரபரப்பு தகவல்கள்
முந்தைய வைரஸ்கள்
இந்தச் சூழலில் இந்த ஓமிக்ரான் கொரோனா எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த சில முக்கிய தகவல்களை அமெரிக்க ஆய்வாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவை மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு உட்படுத்திய போது இது முந்தைய கொரோனா வைரஸ் வகைகளைப் போலத் தோன்றவில்லை. வழக்கமான சளியை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் மனித மரபணு உட்பட பல வைரஸ்களில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஏன் ஆபத்தானது
இது ஏன் ஆபத்தானதாக மாறலாம் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதாவது மனித மரபணுவைக் கொண்டிருப்பதன் மூலம் அது சற்று அதிகமாகவே மனித உடலில் இருக்கும் செல் போல தோற்றமளிக்கக்கூடும். இது மனித நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிக்கும் ஆற்றலை ஓமிக்ரான் வைரசுக்கு அளிக்கும் என்றும் மாசசூசெட்ஸ் கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் டாப் ஆய்வாளர்களில் ஒருவரான வெங்கி சௌந்தரராஜன் தெரிவித்தார். லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்திவிட்டு, அதிவேகமாகப் பரவும் ஆற்றலை இது ஓமிக்ரானுக்கு வழங்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது கூற முடியாது
ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு, சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த உருமாறிய கொரோனா எந்தளவு வேகமாகப் பரவுகிறது எவ்வளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எப்படி தோன்றியது
நமது உடலில் உள்ள நுரையீரல் மற்றும் இரைப்பையில் உள்ள செல்கள் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் மற்றும் வழக்கமான சளியை ஏற்படுத்தும் வைரசால் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் ஒரே ஹோஸ்ட் செல்லில் உள்ள இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் தங்கள் நகல்களை உருவாக்கும் போது, அவை தொடர்பு கொள்ளத் தொடங்குகிறது. அப்போது இரண்டு வைரஸ்களின் (கொரோனா & வழக்கமான சளி) பண்புகளை ஒரு சேரக் கொண்டிருக்கும் புதிய உருமாறிய கொரோனா வகை உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்,
Recommended Video
எய்ட்ஸ் நோயாளி
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் உடலில் இந்த ஓமிக்ரான் கொரோனா உருவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாகவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவோருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறையும். அவர்களுக்கு எளிதாக இதர நோய் பரவலும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் எய்ட்ஸ் நோயாளிக்கு கொரோனா மற்றும் வழக்கமான சளி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அப்போது இந்த உருமாறிய கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வேக்சின் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.