நிறவெறி.. தற்கொலை எண்ணம்.. அதிர்ச்சி தரும் ஹாரி-மேகன் பேட்டி.. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் மீது புகார்
நியூயார்க்: பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராகவும், அங்கு பட்ட கஷ்டங்கள் குறித்தும் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் ஆகியோர் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் நேற்று அளித்த பேட்டி உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டிஷ் ராஜ குடும்பம் குறித்து இவர்கள் அளித்து இருக்கும் பேட்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
அமெரிக்காவை சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவிடம் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் பேசினர். ராஜ குடும்பத்தில் தாங்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டோம் என்று இருவரும் பட்டியலிட்டனர்.
மோசம்
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த வருடமே இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் விலகிவிட்டனர். ஆனால் இவர்கள் இன்னும் அடிப்படை உறுப்பினர்களாக மட்டும் தொடர்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டது. அரச வாழ்க்கையை விட்டுவிட்டு ஹாரி, மேகன் மார்க்கல் இருவரும் தற்போது தங்கள் மகனுடன் அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.
தற்கொலை
ராஜ குடும்பத்தில் தாங்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டோம் என்று இருவரும் இந்த பேட்டியில் குறிப்பிட்டனர். மேகன் தனது பேச்சில், ராஜ குடும்பத்தில் இருந்த போது எனக்கு தற்கொலை உணர்வுகள் அதிகம் இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அங்கு நான் நடத்தப்பட்ட விதம் காரணமாகவும் எனக்கு தற்கொலை உணர்வு அதிகரித்தது. இதை இப்போது சொல்ல கஷ்டமாக இருக்கிறது.. அங்கு எனக்கான பாஸ்போர்ட்,கார் போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது.
தனிமை உணர்வு
எனக்கான தனிமனித சுதந்திரம் அங்கு கிடைக்கவில்லை. எதையும் நான் சுதந்திரமாக செய்ய முடியாது. ஹாரியை தவிர அங்கு நான் யாரிடமும் நெருக்கமாக உணரவில்லை. எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு வாழ இஷ்டமில்லை என்று கூறினேன். இதற்கு சிகிச்சை எடுக்க விரும்பினேன்.. என் மன உளைச்சலுக்கு சிகிச்சை எடுப்பதற்கு கூட ராஜ குடும்பத்தில் அனுமதி அளிக்கவில்லை.
நிற பாகுபாடு
ராஜ குடும்பத்தில் என்னிடம் நிற பாகுபாடு காட்டப்பட்டது. என் குழந்தை கருப்பாக இருக்குமோ என்று அச்சப்பட்டனர். என் குழந்தை கருப்பாக பிறந்து விட கூடாது என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தனர். இதை பற்றி நான் மேலும் சொன்னால் பலர் பாதிக்கப்படுவார்கள். ஆனால் குழந்தையின் நிறம் குறித்து ராஜ குடும்பத்தில் பலர் கவலை தெரிவித்தனர்.
பட்டத்து உரிமை
என் குழந்தைக்கு பட்டத்து உரிமையும் கூட கிடைக்கவில்லை. என் குழந்தை பிறக்கும் முன்பே பட்டத்து உரிமை கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். பட்டத்து உரிமை கிடைக்க கூடாது என்பதால் அதற்கு ஏற்றபடி விதிகளை மாற்றினார்கள். என் குழந்தையின் நிறம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் பண ரீதியாக அதிகம் கஷ்டப்பட்டோம்.
பணக்கஷ்டம்
டயானாவிற்கு ஏற்பட்டது போலவே எங்களுக்கும் அழுத்தங்கள் வந்தது. டயானா எங்களுக்காக விட்டு சென்ற பணத்தைதான் நாங்கள் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம் என்று மேகன் - ஹாரி தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த பேட்டி மொத்தமாக ராஜ குடும்பத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. சர்வதேச ஊடகங்களில் இது பெரிய விவாதமாகி உள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தை மேகன் - ஹாரி மீண்டும் ஒருமுறை உலுக்கி உள்ளனர்.