எப்படி இருந்த நாங்க.. இப்போ.. எலான் மஸ்க் செய்யும் குழப்பத்தால் புலம்பும் ட்விட்டர் ஊழியர்கள்
நியூயார்க்: உலகின் முன்னணி சமூக ஊடகமாக இருக்கும் டிவிட்டரை நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றியதை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் டிவிட்டர் ஊழியர்கள், சமூக ஊடக பிரபலங்கள் ஆகியோர் எலான் மஸ்க் வருவதற்கு முன்னர் இருந்த காலங்களை நினைவு கூர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.
மஸ்க் வருவதற்கு முன்னர் தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறி இனிமையான நினைவுகளை இவர்கள் பகிர்ந்துள்ளனர்.
சென்னையில் இன்று சூரியனுக்கு “ரிலீஸ்”.. 19 ஆம் தேதி மழையின் அடுத்த இன்னிங்ஸ் - தமிழ்நாடு வெதர்மேன்
டிவிட்டர்
உலகின் முதல் நிலை பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்திய கதை நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அவர் வந்த பின்னர் டிவிட்டரின் நிலை எப்படி மாறியிருக்கிறது என்பது பலர் சொல்லிதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது டிவிட்டர் ஊழியர்களே வெளிப்படையாக இது குறித்து கூறி தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதாவது எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்துவதற்கு முன்னர் தாங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளை பார்க்கும்போது இவர்களுக்கு பழைய டிவிட்டர் மீதான ஏக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்
கட்டணம்
டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை உறுதி செய்ய 'ப்ளூ டிக்' எனப்படும் வசதி உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் மஸ்க் டிவிட்டரை வாங்கியதையடுத்து இந்த 'ப்ளூ டிக்' பெற மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், டிவிட்டரில் ஆட்குறைப்பு செய்யப்படும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். அதன்படி, டிவிட்டர் சிஇஓவாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 'பராக் அகர்வால்' உட்பட பலரை பணியிலிருந்து விடுவித்தார். இந்தியாவில் நேற்று முதல் இந்த 8 டாலர் கட்டண வசதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பணி நீக்கம்
ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல பராக் அகர்வால் போன்ற முக்கிய அதிகாரிகள் மட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை எலான் மஸ்க் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் டிவிட்டருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் உறவுகளை பற்றி மீதமுள்ள ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களுடன் உலக நாடுகளின் பத்திரிகையாளர்களும், பிரபலங்களும் எலானுக்கு முன்னர் டிவிட்டர் இருந்த நிலைமையை பகிர்ந்து வருகின்றனர்.
அதிருப்தி
ABS-CBN செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், "நான் ஏராளமான தொடர்புகளை டிவிட்டர் வழியாக உருவாக்கி இருந்தேன். ஆனால் தற்போது இது அனைத்தும் என் கண்முன்னால் சிதைந்து வருகிறது" என்று கூறியுள்ளார். இவரைப் போலவே பேராசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தளங்களில் பணியாற்றும் முக்கிய நபர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஊழியர்கள் பணிநீக்கம், 'ப்ளூ டிக்' பெற கட்டணம் போன்ற காரணங்களால் எலான் மஸ்க் மீது பலரும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அதன் ஊழியர்களும், பிரபலங்களும் இவ்வாறு கூறியிருப்பது, மஸ்க் மீதான் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.