ஆபத்து.. திமிங்கலங்களின் உணவிலும் கலக்கும் கொடூர பிளாஸ்டிக்.. இவ்வளவு கிலோவா? அதிர்ச்சியா இருக்கே!
நியூயார்க்: மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறிந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடல் வாழ் உயிரினத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது உலகின் மிகப்பெரிய பாலூட்டியான திமிங்கலங்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திமிங்கலங்கள் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்களை விழுங்குவதாக ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் திமிங்கலங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைக்கு 'உதயநிதி’ என பெயர் சூட்டிய அமைச்சர்.. வருங்கால முதல்வர் பேரை வச்சிருக்கேன்! உற்சாகம்!
மனிதன்
இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமானதா? என்று நாம் நம்மை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் மனித இனம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மனிதனை மட்டுமே பாதிப்பதில்லை. அவனையும் கடந்து சுற்றுப்புறத்தில் உள்ள உயிரினங்களையும் அவன் தனது சுயநலத்திற்காக பாதிக்கின்றான். மேற்குறிப்பிட்டவாறு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்ய முயற்சிகளை மேற்கொள்ள நாம் உந்தப்படுவோம் என்று சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.
திமிங்கலங்கள்
இந்நிலையில் உலகின் மிகப் பெரிய பாலுட்டிக்கு மனித இனம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கடல் உயிர் ஆய்வாளர் மேத்யூ சவோகா நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த தனது ஆய்வை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் அவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, திமிங்கலங்கள் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக்கை விழுங்குவதாக தெரிய வந்திருக்கிறது.
மைக்ரோ பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவினால் உருவாகும் சிறிய துகள்தான் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படுகிறது. இந்த துகள்கள் அதிகபட்சமாக 5மிமீ அளவில்தான் இருக்கும். உலகில் இந்த பொருட்கள் இல்லாத இடமே கிடையாது என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்த துகள்கள் பரவி கிடக்கின்றன. இந்த துகள்களைதான் தினசரி 10 மில்லியன் (43.5 கிலோ) என்கிற அளவில் திமிங்கலங்கள் தின்று வருகிறது. இதில் நீல திமிங்கலங்கள் 10 மில்லியன் அளவிலும், துடுப்பு திமிங்கலங்கள் 6 மில்லியன் அளவிலும், ஹம்ப்பேக் திமிங்கலங்கள் 4 மில்லியன் என்கிற அளவிலும் மைக்ரோ பிளாஸ்டிக் பொருட்களை விழுங்கி வருகிறன.
ஆய்வு
129 நீலத் திமிங்கலங்கள், 65 ஹம்ப்பேக் திமிங்கலங்கள் மற்றும் 29 துடுப்புத் திமிங்கலங்களின் உணவுப் பழக்கத்தை கேமரா, மைக்ரோஃபோன், ஜிபிஎஸ் லொக்கேட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி கண்காணித்ததில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாக மேத்யூ சவோகா கூறியுள்ளார். இந்த பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்துகொள்ள திமிங்கலங்களின் உணவு முறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திமிங்கலங்கள் நேரடியாக மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்வதில்லை. திமிங்கலங்கள் நாளொன்றுக்கு 10-20 டன் அளவுக்கு உணவுகளை எடுத்துக்கொள்கிறது. இதன் விருப்பமான உணவு, சிறிய வகை மீன்கள் மற்றும் இறால்கள்தான்.
சிறிய மீன்கள்
ஆக முதலில் இந்த சிறியவகை மீன்களும், இறால்களும் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கின்றன. அவற்றை இந்த திமிங்கலங்கள் உட்கொள்ளும்போது மைக்ரோ பிளாஸ்டிக் திமிங்கலங்களின் உடல்களுக்கு செல்கிறது. திமிங்கலங்கள் பொதுவாக 50-250 ஆழத்தில்தான் வேட்டையாடுகிறது. இந்த ஆழத்தில்தான் அதிக அளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை பிளாஸ்டிக்குகள் குடலுக்குள் சென்றால் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி திமிங்கலத்தின் நாளமில்லா சுரப்பியை பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிராண வாயு கூட இல்லாத கிரகத்தில் உயிர்களை தேடி அலையும் மனிதன், தான் இருக்கும் கிரகத்தில் உள்ள உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.