30 ஆயிரம் ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை... துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி
ஊட்டி: ஊட்டியில் ரோஜா மலர் கண்காட்சி இன்று துவங்கிய நிலையில் 30 ஆயிரம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மரவீடு, 20 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பியானோ, பிளாஸ்டிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ரோஜா மலர்களால் மஞ்சப்பை வடிமைக்கப்பட்டது. இவை அனைத்தும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மலர், ரோஜா, காய்கறி, பழ கண்காட்சி ஆண்டுதோறும் கோடை விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த வாரம் துவங்கியது. அங்கு காய்கறி கண்காட்சி நடந்தது. இதையடுத்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சி 3 நாள் நடைபெற உள்ளது.
ஊட்டி போல் சென்னையிலும்.. கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி! வரலாற்றில் முதன்முறையாம்
ரோஜா கண்காட்சி துவக்கம்
இதன் தொடர்ச்சியாக இன்று ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வடிவங்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரமாண்டமான மரவீடு
பல வண்ணங்கள் கொண்ட 30 ஆயிரம் ரோஜாக்கள் மூலம் பிரமாண்டமான மரவீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பியாேனா, மான், பனிக்கரடி, படச்சுருள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் வண்ண வண்ண மலர்கள் மூலம் திண்டுக்கல் பூட்டு சாவி, கோபுரம், மனித உருவம், பல்வேறு விலங்குகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிலா மாடம் அருகே மெரிகோல்டு மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சப்பை விழிப்புணர்வு
மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இந்த கண்காட்சியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரோஜா பூக்களால் மஞ்சப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனருகே பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர், மஞ்சப்பை உபயோகிப்பீர் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
40 வகை செடிகளில் 4 ஆயிரம் பூ
மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துைற சார்பில் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகை மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண மலர்களில் பூத்து குலுங்கியது. இவை அனைத்தையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ரோஜா இதழ்களை கொண்டு ரங்கோலிகள் போடப்பட்டு இருந்தன.