ஜி.ஹெச். டாக்டரே போதும்! கோவைக்கு வேண்டாம்! கொரோனா தொற்றிலும் அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி!
நீலகிரி: வனத்துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மற்ற அமைச்சர்களை அச்சப்பட வைத்திருக்கிறது.
கொரோனா தொற்று உறுதியானதும் எவ்வித பதற்றமும் அடையாமல் குன்னூரில் உள்ள தனது இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.
உ.பி.யில் புதிய வாக்காளர்களை கவர வியூகம்.. 'இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை'யை வெளியிட்ட காங்கிரஸ்!
அமைச்சருக்கு கொரோனா
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஒரு வார காலமாகவே வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார். இதற்காக காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் அவர் இரவு தான் வீடு திரும்பியிருக்கிறார். டைட் செட்யூல்களால் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்த அமைச்சர் ராமச்சந்திரனுக்கு நேற்று காலை முதலே கடுமையான உடல்வலியும், காய்ச்சலும் இருந்திருக்கிறது. இதையடுத்து நீலகிரி அரசு மருத்துவமனையிலேயே கொரோனா சோதனை செய்து கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதி என இன்று காலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜி.ஹெச்.டாக்டர்கள்
இதையடுத்து உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல், ஜி.ஹெச்.டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சையே போதுமானது எனக் கூறி அவர்கள் அளித்துள்ள மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறார். குன்னூர் அருகே உள்ள இளித்துறை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
நலம் பெறுகிறார்
இதனிடையே இது குறித்து நம்மிடம் பேசிய அமைச்சரின் அரசியல் உதவியாளர் மாதன், ''அமைச்சர் நான்கைந்து நாட்களில் குணம் பெற்றுவிடுவார் என நம்புகிறோம். ஜி.ஹெச்.டாக்டர்கள் தான் அமைச்சருக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே மருந்துகளை எடுத்து வருகிறார். தனியார் மருத்துவமனைக்கு வேண்டாம் எனக் கூறிவிட்டார். நேற்று இருந்ததற்கு இன்று பரவாயில்லை, நன்றாக இருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.
6-வது அமைச்சர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அமைச்சர் மூர்த்தியும் இதேபோல் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னர் அமைச்சர்கள் மதிவேந்தன், எஸ்.எஸ்.சிவசங்கர், எ.வ.வேலு, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.