30 ஆண்டுகால லாக்டவுனுக்கு முடிவு... பீஹாரில் புதிய முழக்கம்.. முதல்வராக முடி சூட முனையும் புஷ்பம்..!
பாட்னா: பீஹாரில் 30 ஆண்டுகால லாக்டவுனுக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் புளுரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி.
பீஹார் மாநிலத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் தேர்தலில் போட்டியிடும் புஷ்பம் பிரியா சவுத்ரி, இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை லண்டனில் வசித்து வந்த அவர் முதல்முறையாக அரசியலில் இறங்கி பீஹார் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

லண்டனில் வசித்தவர்
பீஹார் மாநிலம் பல்பத்ரபூரை சேர்ந்த புஷ்பம் பிரியா சவுத்ரி இதுவரை லண்டனில் வசித்து வந்தவர். இவரது அப்பா வினோத் சவுத்ரி ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் எம்.எல்.சியாக ஒரு முறை இருந்திருக்கிறார். நிதிஷ்குமாரின் இளமைப் பருவத்தில் புஷ்பம் பிரியாவின் தாத்தா உமாகாந்த் சவுத்ரி அவருக்கு அரசியல் ஆசானாக விளங்கினார்.

அரசியல் அமைப்பு
கல்லூரி பேராசிரியரான வினோத் சவுத்ரி தனது மகள் புஷ்பம் பிரியாவை லண்டனில் உயர்கல்வி படிக்க வைத்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பொதுநிர்வாகத்துறை முடித்த புஷ்பம் பிரியா சவுத்ரி, அங்கேயே வசிக்கத் தொடங்கினார். இதனிடையே அவருக்கு அவ்வப்போது சொந்த மாநிலமான பீஹார் மீது கரிசனம் எட்டிப்பார்க்கத் தொடங்கியதை அடுத்து, அரசியல் அமைப்பு ஒன்றை தொடங்க விரும்பினார்.

ப்ளூரல்ஸ்
பின்னர் தனது நலம்விரும்பிகளுடன் ஆலோசித்து இந்தாண்டு தொடக்கத்தில் புளூரல்ஸ் என்ற கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவித்துள்ள இவர், இப்போது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். இதனிடையே ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இவரை ஒரு போட்டியாகவே கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்புரை
பீஹார் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த முந்தைய அரசுகள் தவறிவிட்டதாகவும், கொரோனா லாக்டவுன் நாட்களை போல் கடந்த 30 ஆண்டுகளாக பீஹாரில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை எனவும் இவர் சாடியிருக்கிறார். இவருக்கு பெரிய படை பரிவாரங்கள் இல்லையென்றாலும் குறைந்தது நான்கைந்து பேருடனாவது தனது பரப்புரையை செய்து வருகிறார்.

வாக்காளர்கள்
பீஹாரில் மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் தமக்கு ஆதரவு தருவார்கள் என்பது புஷ்பம் பிரியா சவுத்ரியின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையே ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு, லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் வாக்காளர்களிடம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications