பாஜகவை விமர்சித்து பாடல்! சலவை பெண் தொழிலாளிக்கு எம்எல்சி பதவி வழங்கிய லாலு கட்சி! நடந்தது என்ன?
பாட்னா: பீகார் சட்ட மேலவை(எம்எல்சி) தேர்தலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சலவை பெண்ணான முன்னி ரஜாக்கை ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சி வேட்பாளராக நிறுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜகவை விமர்சித்து பாடல் பாடிய தொடர்ந்து கட்சிக்கும், கட்சி தலைவர்களுக்கும் விசுவாசமாக இருந்ததால் இந்த பதவி அவரை தேடி சென்றுள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில் சமீப காலமாக பாஜக, ஐக்கிய ஜனதாதளம் இடையே உரசல் போக்கு உள்ளது.
இங்கு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் கட்சியை வழிநடத்தி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
குடியரசுத் தலைவர் போட்டியில் பீகார் முதல்வரா? எல்லாம் பொய்யாம் - நிதீஷ் குமாரே சொல்லிட்டாரு
சட்ட மேலவை தேர்தல்
பீகாரில் 75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவை உள்ளது. இங்கு பொதுவாக கோடீஸ்வரர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்சிக்களும் கோடீஸ்வரர்களாவர். தற்போது இந்த நிலை மாறியுள்ளது.
பெண் சலவை தொழிலாளி தேர்வு
ஏனென்றால் சலவை தொழிலாளி ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது திங்கட்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அசோக் குமார் பாண்டே, முன்னி ரஜக், கரி சுஹைல் ஆகியோர் ராஷ்ட்ரிய ஜனதாதளம்(ஆர்ஜேடி) கட்சியை சேர்ந்தவர்களாவ. ரவீந்திர பிரசாத் சிங், அபாக் அகமது கான் ஆகியோர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்களாவர். ஹரி சாஹ்னி மற்றும் அனில் ஷர்மா ஆகியோர் பாஜகவின் தேர்வாக உள்ளது.
அனைத்து போராட்டங்களிலும்...
இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னி ரஜக் பக்தியார்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். மாநிலத்தின் பல்வேறு நிகழ்ச்சி, போராட்டம், தர்ணாவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவை விமர்சித்து பாடல்
மே 20ல் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) லாலு பிரசாத்தின் வீடுகளில் சோதனை நடத்தியபோது இவர் தர்ணா நடத்தினார். மேலும் இதற்கு முன்பு பக்தியார்பூரில் மேடையில் பாஜகவை விமர்சனம் செய்தும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவாகவும் பாடல் ஒன்றை பாடினார். மேலும் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பார்க்க இவர் சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் கதறி அழுதது செய்தி சேனல்களில் வெளியானது. இதுபோன்ற தீராபற்று காரணமாக லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரை ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக அவரை பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேடி வந்துள்ளது.
முன்னி ரஜாக் கூறுவது என்ன?
சட்ட மேலவை உறுப்பினராக முன்னி ரஜாக் கூறுகயைில், "நான் சட்ட மேலவை உறுப்பினராக மாறியதை நம்ப முடியவில்லை. மே கடைசி வாரத்தில் என்னை லாலு பிரசாத் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு லாலு பிரசாத்தின் மனைவி ரப்ரி தேவி, லாலுவின் மூத்த மகன் தேஜூ மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். என்னை எம்எல்சி(சட்டமேலவை தேர்தல்) ஆக்க முடிவு லாலு முடிவு செய்திருப்பதாக கூறினார். இதை கேட்டு நான் அதிர்ச்சியில் பேசாமல் இருந்தேன். லாலு ஜியும் ராப்ரி தேவியும் எனது பெற்றோரைப் போன்றவர்கள். வாய்ப்பளித்ததற்கு நன்றி.
பாஜகவின் எதிர்மறையை சுத்தம் செய்வேன்
நான் கடந்த 30 வருடங்களாக சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். என் பெற்றோரும் சலவை தொழிலாளிகள் தான். நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து அவையில் கேள்வி எழுப்புவேன். பாஜகவின் எதிர்மறை எண்ணங்களை நான் சபைக்குள் சுத்தம் செய்வேன்'' என்றார்.
பாஜக விமர்சனம்
இதற்கிடையே முன்னி ரஜாக் தேர்வு குறித்து பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி பாஜக எம்எல்சி நவல் ககிஷோர் யாதவ் கூறுகையில், ‛‛ நான் முன்னி ராஜாக்கின் தேர்வை வரவேற்கிறேன். இருப்பினும் அவரால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. வெறும் முகமாக மட்டுமே இருக்க முடியும். நிதி அனைத்தும் அந்த கட்சியின் குடும்பத்தினரால் செலவு செய்யப்படும்'' என விமர்சனம் செய்தார்.