பாஜகவுக்கு எதிராக அணி.. பிரதமர் வேட்பாளர் யாரு? நைசாக நழுவ முயன்ற நிதிஷ்.. இருக்குமாறு கூறிய கேசிஆர்
பாட்னா: வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நைசாக நிதிஷ் குமார் வெளியேற முயன்ற நிலையில்.. சந்திரசேக ராவ் 'தயவு செய்து இருங்கள்' என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு அணியை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது அணி
அண்மையில் பாஜகவுடனாக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்துக்கொண்ட நிதிஷ் குமாரும் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இந்த மூவரும் முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது. எனினும், காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது என்ற பேச்சுக்கள் எழுவதும் மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் இந்த முயற்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

பீகார் முதல்வருடன் சந்திப்பு
இந்த நிலையில், பீகார் சென்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், நேற்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் தற்போதைய அரசியல் சூழல், மற்றும் எதிர்வரும் லோக்சபா தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் மூன்றாவது அணியை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

வாங்க போகலாம்
இந்த சந்திப்புக்கு பிறகு நிதிஷ்குமாரும், சந்திர சேகர் ராவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்கள், வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத நிதிஷ் குமார், 'வாருங்கள் போகலாம்' என்றார். ஆனால், சந்திரசேகர் ராவ், 'தயவு செய்து இருங்கள்' என்று நிதிஷ் குமாரை நிறுத்தினார்.

விரிவாக ஆலோசனை செய்வோம்
தொடர்ந்து பேசிய சந்திர சேகர் ராவ், ''நான் ஒரு பெயரை முன்மொழிந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று யார் கூறியது?.. ஏன் அவசரப்படுகிறீர்கள்?... நாங்கள் (எதிர்க்கட்சிகள்) இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை செய்வோம்'' என்றார். நிதிஷ்குமார் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்புவதிலேயே தீவிரம் காட்டிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பாஜக, நிதிஷ்குமாரை விமர்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications