இந்து மதம் சர்ச்சை.. "அண்ணன் ஆ.ராசா பேசியதில் என்ன தவறு" ஆட்டத்துக்குள் வந்த சீமான்!
பெரம்பலூர்: இந்து மதம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இழிவாக பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்திற்க்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
அனைவருக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர எல்லா ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என்று பேசுகிறார். இதை கண்டித்து நாங்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
1.. 2.. 3.. ஸ்டார்ட் ஆயிடுச்சே..
சீமான் பேட்டி
இந்த நிலையில் ஆ.ராசா பேச்சு, அரசியல் தலைவர்கள் மத்தியில் விவாதமாக எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது, முருகனுக்கு விழா எடுக்கும் நாம் தமிழர் கட்சி விநாயகர் சதுர்த்தியின் போது, ஏன் விழா எடுப்பதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வரலாற்றில் முருகன் மட்டுமே இருக்கிறார். அவர் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் மகன், தமிழ்க்கடவுள், ஆனால் விநாயகர் எப்படி வந்தார் என்பதே தெரியாது என்று பதிலளித்தார்.
ராகுல் காந்தி
இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் நடைபயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவர் நடைபயிற்சியில் தான் ஈடுபடுகிறார். 50 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த போது ஏற்படுத்த முடியாத மாற்றத்தை, 4 மாதங்களில் நடந்து ஏற்படுத்திவிடுவாரா? நடப்பதால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியாது. மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார்.
மின் கட்டணம்
தொடர்ந்து மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் எந்த ஒரு சாமானியரும் பொதுமக்களும் மின்கட்டணத்தை உயர்த்துமாறு சொல்லவில்லை. மாறாக அதிமுக ஆட்சியின் போது கொரோனாவை விட கொடியது இந்த மின் கட்டண உயர்வு என்று பேசிய இதே முதலமைச்சர் தற்பொழுது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு விஷயத்திற்கு எதிராக பேசும் திமுகவினர் ஆளுங்கட்சியாக மாறிய பிறகு அதே செயலை செய்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஆ.ராசாவுக்கு ஆதரவு
பின்னர் ஆ.ராசாவின் கருத்துக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சூத்திரர்கள் காலில் இருந்து பிறந்ததாக தான் சாஸ்திரிங்கள் கூறுகின்றன. அதனால் அண்ணன் ஆ.ராசா பேசியதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அந்த மதம் தான் பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தி வைத்துள்ளது. அந்த வழியில் தான் அவர் சொல்கிறார் என்று தெரிவித்தார்.