3 நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் புதுச்சேரியில் காங். அரசை கவிழ்த்தது பாஜக!
புதுச்சேரி: புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வைத்தே முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.
புதுச்சேரி சட்டசபையில் ஆளும் காங்கிரஸுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸுக்கு 7; அதிமுகவுக்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது.
ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்க முடியும். இந்த 3 பேரையும் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்திருந்தார். இந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள்.
நியமன எம்.எல்.ஏக்கள் உரிமை
பொதுவாக நியமன எம்.எல்.ஏக்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை உண்டா? என்கிற சர்ச்சை இன்னமும் முடியவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டா? இல்லையா? என்கிற பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை.
புதுவை நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை என முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதை ஏற்கமறுத்துவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் பலம் 14 ஆகவும் ஆளும் காங்கிரஸுக்கான பலம் 12 ஆகவும் இருந்தது.
நாராயணசாமி ராஜினாமா
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்வர் நாராயணசாமி கொடுத்தார்.
ஆட்சி கவிழ்ப்பு
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் கூறுகையில், சட்டசபை தேர்தலில் மக்களிடம் டெபாசிட் கூட வாங்க முடியாத ஒருவரை நியமன எம்.எல்.ஏவாக்கினர். அந்த பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் மூலமே காங்கிரஸ் அரசு இப்போது கவிழ்க்கப்பட்டுள்ளது என ஆதங்கப்பட்டார்.