புதுச்சேரியில் உச்சக்கட்ட பதற்றம்.. நடுக்கடலில் மீனவர்களிடையே பயங்கர மோதல்..போலீசார் துப்பாக்கி சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்கள் நடுக்கடலில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
புதுச்சேரியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும் நல்லவாடு மீனவர்களுக்கும் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக நேற்று நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. நல்லவாடு மீனவர்கள் தங்களது படகு மூலம் வீராம்பட்டினம் மீனவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல் கரையிலிருந்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்குத் தெரிய வரவே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இருதரப்பினரும் ஈட்டி, கம்பு, வீச்சருவாள், சுளுக்கு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரையில் ஒன்று திரண்டனர். மேலும், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாகத் தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இவர்கள் இருதரப்பு மீனவர்களையும் கடற்கரையில் இருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், இருதரப்பு மீனவர்களும் கலைந்து செல்லாததால் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதன் பின்னரே மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் மதியம் நடந்தது. இந்நிலையில் மாலையில் இர தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் மீண்டும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். ஒரே நாளில் புதுச்சேரியில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications