கொரோனாவை சமாளிக்க 200 படுக்கைகள் தயார்.. லேப் திறப்பு.. நாராயணசாமி தகவல்
புதுச்சேரி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்க புதுச்சேரியில் 200 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.


கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்த வேண்டும். ரெயில்நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவ குழுவை அமைக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பிறப்பித்தார்.


கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை அளிப்பதற்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கைகள் வீதம் மொத்தம் 200 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்வதற்கு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மணி நேரத்தில் முடிவுகள் தெரியவரும். அதேபோல் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மாநில அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள மருந்தகங்களில் மாஸ்க் பதுக்கல் மற்றும் விலை அதிகமாக விற்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications